சூயஸ் கால்வாய் டிராபிக்.. பல நூறு கோடி நஷ்டம்..காற்று இல்லை மனித தவறே காரணம்..வெளியான பரபரப்பு தகவல்
எகிப்து: சூயஸ் கால்வாயில் கப்பல் தரைதட்டி நிற்க அங்கு வீசிய கடுமையான காற்றே காரணம் என்று தகவல் வெளியான நிலையில், மனித தவறு அல்லதோ தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக இருக்கலாம் எனறு கால்வாய் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகின் அதிமுக்கிய வணிக கப்பல் போக்குவரத்து நடைபெறும் வழித்தடங்களில் ஒன்று சூயஸ் கால்வாய். இது செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் நேரடியாக இணைக்கிறது. தினசரி 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்த கால்வாய் வழியே செல்லும்.
இந்த கால்வாய் இருப்பதால் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிச் செல்லாமல் நேரடியாக இந்திய பெருங்கடலிலிருந்து ஐரோப்பிய நாடுகளை அடைய முடியும், இதன் மூலம் சுமார் 14 நாட்கள் வரை பயண நேரத்தைச் சேமிக்க முடியும்.

தரைதட்டிய கப்பல்தரைதட்டிய கப்பல்
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சுமார் 2 லட்சம் டன் எடை கொண்ட 'எவர் கிவன்' என்ற சரக்கு கப்பல் இந்த கால்வாயில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கால்வாய்க்குப் பக்கவாட்டில் திரும்பிய இந்தக் கப்பல் தரைதட்டி மோதி நின்றது. இதன் காரணமாக அங்குக் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 40 நாட் வேகத்தில் அங்கு வீசிய பலத்த காற்றே இதற்குக் காரணம் என்று முதலில் கூறப்பட்டது.

மனித தவறு காரணம்
இந்நிலையில், கப்பல் தரைதட்டி நின்றதற்குக் காற்று மட்டும் காரணமாக இருக்காது என்று சூயஸ் கால்வாய் தலைவர் ஒசாமா ராபி தெரிவித்துள்ளார். கப்பல் கடக்கும்போது பலத்த காற்று வீசியது உண்மைதான் என்றாலும் பல கப்பல்கள் இதுபோன்ற காற்று வீசும்போது பத்திரமாகக் கால்வாயைக் கடந்து சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார். கப்பல் தரைதட்டி நிற்க மனித தவறுகள் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

வணிகம் பாதிப்பு
சூயஸ் கால்வாயில் தற்போது கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தினசரி 9.6 பில்லியன் டாலர் அளவுக்குச் சரக்கு வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கால்வாயைக் கடக்க வசூலிக்கப்படும் வாடகை கட்டணமான சுமார் 12 முதல் 14 மில்லியன் டாலர் வருவாயை தினசரி எகிப்து அரசு இழந்து வருவதாகவும் ஒசாமா ராபி குறிப்பிட்டார்,

மிதக்க வைக்க திட்டம்
கப்பலின் அடியில் இருக்கும் மணல்களை நீக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அதைத்தொடர்ந்து இழுவை கப்பல்களைக் கொண்டு எவர் க்ரீன் கப்பலை மீண்டும் மிதக்க வைக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. இன்று இரவு கப்பலை மிதக்க வைக்கும் முயற்சி நடைபெறும் என்று ஒசாமா ராபி தெரிவித்துள்ளார். இருப்பினும், அடியில் அதிகளவு மணல் சிக்கியுள்ளதால் அங்குப் போக்குவரத்து சரியாக ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை ஆகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கப்பல் போக்குவரத்து பாதிப்பு
எவர் க்ரீன் கப்பல் தரைதட்டியுள்ளதால், சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 400 கப்பல்கள் இரண்டு பக்கத்திலும் அணிவகுத்து நிற்கிற்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் கப்பல்களுக்கு இரண்டே ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளது, ஒன்று ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிச் செல்ல வேண்டும். இப்படிச் சென்றால் கூடுதலாக 12 நாட்கள் ஆகும், அதற்கான எரிபொருள் செலவும் அதிகம்.

வணிகம் பாதிப்பு
மற்றொரு ஆப்ஷன் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து சரியாகும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், இங்குப் போக்குவரத்து பாதிப்பு தொடரும்பட்சத்தில் இதனால் சர்வதேச வணிகத்தில் ஏற்படும் பாதிப்பும் அதிகம். இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களாகக் குறைந்துவந்த கச்சா எண்ணெய் விலை, இந்த விபத்திற்குப் பின் மட்டும் சுமார் 6% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications