போருக்கு நடுவே.. இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பற்றி பேசிய இஸ்ரேல் தூதர்.. சொன்ன வார்த்தைதான் ஹைலைட்
டெல் அவிவ்: நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியது. இந்திய அணியின் வெற்றியை பாராட்டி பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இஸ்ரேல் தூதரும் இந்திய அணியை பாராட்டி பதிவிட்டுள்ளார். இதில் பாகிஸ்தான் பற்றி சொன்ன கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் இந்தியா இடையிலான உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. உலக கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது இல்லை. அதாவது உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 8 முறை மோதியுள்ளன. இந்த 8 போட்டிகளிலும் இந்தியாதான் வெற்றி வாகை சூடியுள்ளது.

பாகிஸ்தானை இந்திய அணி நேற்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதை இந்தியா முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்திய அணியின் வெற்றிக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அதுபோக திரை உலக நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இப்படி சமூக வலைத்தளங்களில் நேற்று இரவு முதலே இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் பற்றிய பதிவுகள் நிரம்பி வழிகின்றன. இதனிடையே, உலகிலேயே பெரிய மைதனமான அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற போஸ்டர்களையும் கேமரா முன்பாக காட்டினர்.
இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நேயர் கிலன் , பாகிஸ்தான் வெற்றியை ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு அர்ப்பணிக்க முடியாமல் போனதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். இது குறித்து இஸ்ரேல் தூதர் கூறியிருப்பதாவது:- உலக கோப்பை தொடரில் இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணியின் வெற்றியால் பாகிஸ்தானால் தனது வெற்றியை ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு அர்ப்பணிக்க முடியாமல் போய்விட்டது.
போட்டியின் போது இந்தியாவில் உள்ள நண்பர்கள் போஸ்டர்கள் மூலமாக இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியது எங்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது"என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக கடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் வீரர் முகம்மது ரிஸ்வான், இந்த வெற்றியை காசாவில் உள்ள எங்கள் சகோத சகோதரிகளுக்கு அர்ப்பணிப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை மேற்கூறியவாறு சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் தூதரின் இந்த சமூக வலைத்தள பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications