பாகிஸ்தானில் வெளிநாட்டு வீரர்களுக்கு ஆபத்து? அம்பலமான தீவிரவாதிகளின் கடத்தல் திட்டம்! புதிய வார்னிங்
இஸ்லாமாபாத்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளைத் தவிர்த்து மற்ற போட்டிகள் இப்போது பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறும் நேரத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் மோசமான சதி செயலில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி மட்டும் பாகிஸ்தான் சென்று விளையாடச் சம்மதிக்கவில்லை. இதனால் இந்திய அணி போட்டிகள் மட்டுமே துபாயில் நடைபெற்று வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காகப் பாகிஸ்தான் வந்துள்ள வெளிநாட்டுப் பயணியைப் பயங்கரவாதிகள் கடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் பாகிஸ்தான் பிரிவான ஐஎஸ்கேபி அமைப்பினர் வெளிநாட்டினரைக் கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஐஎஸ்கேபி தீவிரவாதிகள் ஏற்கனவே பாகிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டினர், குறிப்பாகச் சீன மற்றும் அரபு நாட்டினரைக் குறிவைத்துக் கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. அதேபோல மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். துறைமுகங்கள், விமான நிலையங்கள், வெளிநாட்டினர் இருக்கும் குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்து ஐஎஸ்கேபி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.. வெளிநாட்டுப் பார்வையாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரருக்கும் ஆபத்து ஏற்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
எச்சரிக்கை
இது தொடர்பான எச்சரிக்கை ரிப்போர்ட்டில், "ஐஎஸ்கேபி தீவிரவாதிகளின் நகரின் புறநகரில் உள்ள சில இடங்களை வாடகைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். கேமரா இல்லாத ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களை அவர்கள் வாடகைக்கு எடுக்கிறார்கள். இது ரிக்ஷா அல்லது மோட்டார் சைக்கிள் மூலம் மட்டுமே செல்லும் அளவுக்குத் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளாக இருக்கும். இரவு நேரத்தில் வெளிநாட்டினரைக் கடத்தி இங்கு அழைத்து வர அவர்கள் திட்டமிட்டுள்ளனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அணி மீது தாக்குதல்
பாகிஸ்தானில் சர்வதேச வீரர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என்று பலரும் எச்சரித்த நிலையில், இப்போது பாகிஸ்தான் உளவு அமைப்பே இந்த எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது. முன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் அடுத்த சில ஆண்டுகள் எந்தவொரு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.
அதன் பிறகும் கூட ஐசிசி தொடர் எதுவும் பாகிஸ்தானில் நடைபெறாமலேயே இருந்தது. இப்போது நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 13 ஆண்டுகளுக்குப் பின் அங்கு ஐசிசி தொடர் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் ஐஎஸ்கேபி தீவிரவாதிகளின் கடத்தல் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications