பாகிஸ்தானில் புதிய பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது.
இஸ்லாமாபாத் : பாஸ்தானின் 19-வது பிரதமராக அப்பாஸி பதவி ஏற்றார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் இணையமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தகுதி நீக்கம் செய்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று கடந்த 28-ந் தேதி நவாஸ் ஷெரீப் பதவி விலகினார். இதனையடுத்து அடுத்த பிரதமராக யார் பதவியேற்பார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
நவாஸ் ஷெரிப் பதவி விலக உத்தரவிட்டதையடுத்து அவரது சகோதரர் ஷப்பாஸ் ஷெரீப் பிரதமராகலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் புதிய பிரதமராக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகள் பெற்றதையடுத்து ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராக நியமனம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை பாகிஸ்தான் பிரதமராக அப்பாஸி முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.
இஸ்லமாபாத்தில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமராக அப்பாஸி பதவி ஏற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் மம்னூன் ஹுசைன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து 46 பேர் கொண்ட மந்திரிசபையும் பதவி ஏற்றது. அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை, மாறாக சில புதிய முகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
காவ்ஜா முகம்மது ஆசிப் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். ஆசன் இக்பால், உள்துறை அமைச்சர் பொறுப்பையும், பாதுகாப்புத்துறை அமைச்சராக குர்ரம் தாஸ்டகிரும் பதவி ஏற்றுள்ளனர்.