இஸ்ரேலில் தீவிரமடைந்த போராட்டம்.. பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராகத் திரண்ட மக்கள்.. பெரும் பதற்றம்!
ஜெருசலேம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த போராட்டம் படிப்படியாக தீவிரமடைந்துள்ளது.
இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு செயல்பட்டு வருகிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் பிரதமராக பதவி வகித்து வரும் நெதன்யாகு மீது ஊழல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, பிரதமர் நெதன்யாகு கொண்டு வரப்போகும் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

நீதித்துறை அதிகாரக் குறைப்பு
இஸ்ரேல் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் பிரதமர் நெதன்யாகு தலைமையில் நாடாளுமன்றத்தில் புதிதாக சட்டம் கொண்டு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டம் அமலாகும் பட்சத்தில் நீதித்துறையின் அதிகாரம் குறையும். நீதித்துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி அரசுக்கும், நீதித்துறைக்கும் சம அதிகாரம் என்ற நிலை வரும். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறவும் இஸ்ரேல் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும். அதேபோல், நீதிபதிகள் நியமிப்பதிலும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

பிரதமர் நெதன்யாகு
இது நீதித்துறையை முடக்கும் செயல் என கூறி இஸ்ரேலில் கடுமையாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. தன் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பித்துக் கொள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்யும் சூழ்ச்சிதான் இந்தச் சட்டம் என்று என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். நீதித்துறையில் மாற்றங்களை கொண்டுவரும் அரசின் முடிவை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹலெண்ட் விமர்சித்தார். இதனால், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹலெண்டை பிரதமர் நெதன்யாகு பதவில் இருந்து நீக்கினார்.

போராட்டங்கள் தீவிரம்
இதனைத் தொடர்ந்து, நீதித்துறையில் மாற்றங்களை கொண்டுவரும் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேல் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டங்களுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் நீதித்துறையில் சீர்திருத்தம் செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான நிலையம் மூடல்
நெதன்யாகுவின் முயற்சிக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு டெல் அவிவ் விமான நிலைய ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து வேலையை புறக்கணித்தனர். இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டடது. விமான நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டது.

பதற்றம்
ஜெருசலேமின் பிரதான நுழைவாயிலை போராட்டக்காரர்கள் அடைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. அவர்களை கலைக்க போலீசார் முயன்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். ஜெருசலேமில் நடைபெற்ற போராட்டங்களின்போது, அதிகாரிகளைத் தாக்கியதாக மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications