பழைய தலையணை இருந்தால் உடனே தூக்கி தூர போடுங்க.. கழிப்பறையை விட அதிக பாக்டீரியா இருக்காம்! ஷாக் ஆய்வு
நியூயார்க்: காலை முதல் மாலை வரை ஓடி ஓடி உழைத்துவிட்டு, இரவு எப்போ தான் தூங்குவோம் என்ற மனநிலையே பலருக்கும் இருக்கும். இரவு தூங்கும்போது தான் கிட்டத்தட்ட பலருக்கும் நிம்மதியாக இருக்கும். ஆனால், உங்கள் கழிப்பறை இருக்கையை விடவும், உங்கள் பழைய துவைக்கப்படாத தலையணை உறைகளில் அதிகப் பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும் என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த "நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன்" என்ற அமைப்பு இது தொடர்பான ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது. அதில் தான் தலையணையில் இருக்கும் ஆபத்துகளை விளக்கியுள்ளன. தலையணை உறைகளை ஒரு வாரம் துவைக்காமல் விட்டாலே அதன் உறைகளில், கழிப்பறை இருக்கையை விட அதிகப் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆபத்துகள்
அந்த ரிப்போர்ட்டில் மேலும், "படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் ஆகியவற்றை நாம் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால், அவற்றில் காலப்போக்கில் கணிசமான அளவு பாக்டீரியாக்கள் குவியும். ஒரு மாதம் துவைக்காமல் இருக்கும் தலையணை உறைகள் மற்றும் விரிப்புகளில், ஒரு சதுர அங்குலத்திற்குப் பல லட்சம் பாக்டீரியா காலனிகள் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான பாக்டீரியா
ஒரு வாரம் பயன்படுத்திய தலையணை உறையில் கழிப்பறை இருக்கையை விட 17,000 அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கிறதாம். அதாவது ஒரு சதுர அங்குலத்திற்கு 30 முதல் 50 லட்சம் பாக்டீரியா காலனிகள் சேர்ந்துவிடுகிறதாம். படுக்கை விரிப்புகளில் பொதுவாகக் கிராம்-நெகட்டிவ் ராட்ஸ், கிராம்-பாசிட்டிவ் ராட்ஸ், பேசில்லி மற்றும் கிராம்-பாசிட்டிவ் காக்கி ஆகிய பாக்டீரியா வகைகளே அதிகம் காணப்படுகிறது. இவற்றில் சில பாக்டீரியாக்கள் நோய்த்தொற்றுகளைக் கூட ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலையணை உறைகள்
கழுவப்படாத தலையணை உறைகளில் தூங்கும்போது பாக்டீரியா, பூஞ்சை மற்றும் அலர்ஜி காரணமாகப் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். முகப்பரு மற்றும் தோல் எரிச்சல் போன்றவை பொதுவான பிரச்சனைகளாக இருக்கும். தலையணை உறைகள் எண்ணெய், வியர்வை, இறந்த சரும செல்கள் மற்றும் பாக்டீரியாக்களால் நிறைந்து இருக்கும். இதனால் அவை நமது சருமத்தில் படும்போது, தோலில் இருக்கும் துளைகளை அடைத்து, முகப்பருக்களை உருவாக்கலாம் அல்லது எக்ஸிமா மற்றும் ரோசாசியா போன்ற நிலைகளை அதிகரிக்கலாம்.
ஆபத்து
சில நேரம் இதனால் சுவாசப் பிரச்சனைகள் கூட ஏற்படலாம். தலையணை உறைகளில் தூசிப் பூச்சிகள், பூஞ்சை வித்திகள் மற்றும் செல்லப் பிராணிகளின் முடி ஆகியவை சேர்வதால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். தும்மல், மூக்கடைப்பு, கண்களில் நீர் வடிவது ஆகியவை ஏற்படும். நீண்ட காலம் இந்த அலர்ஜி இருந்தால் அது சுவாச நோய்களைக் கூட ஏற்படுத்தும்.
ஸ்டெஃபிலோகாக்கஸ் (ஸ்டாப் தொற்று) மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் போன்ற பாக்டீரியா தொற்றுகளும் அசுத்தமான தலையணை உறைகள் மூலம் பரவலாம். முகத்தில் வெட்டுக் காயங்கள் அல்லது முகப்பருக்கள் இருந்தால், தலையணை கவர்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் நமது உடலில் புகுந்து மோசமான நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தடுக்க என்ன செய்யலாம்?
சில நேரங்களில் நீண்ட காலம் பயன்படுத்தப்படும் போது அழுக்கான தலையணை கவர்களில் பெட் பக்ஸ் அல்லது பேன்கள் கூட இருக்கலாம்.. இது சரும அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்க, தலையணை உறைகளைத் தடுக்கப் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்.. ஒவ்வொரு வாரமும் சோம்பேறித்தனம் படாமல் தலையணை கவர்களை துவைத்துப் போட்டாலே போதும்!












Click it and Unblock the Notifications