மொரட்டு சிங்கள்களுக்கு செம சான்ஸ்... கல்யாணம் பண்ணா ரூ.70 லட்சம் கடன், குழந்தை பெத்த கடன் தள்ளுபடி
சியோல்: மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் திருமணம் செய்து குழந்தை பெறும் தம்பதிக்கு சுமார் 70 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கவுள்ளதாகத் தென் கொரியாவிலுள்ள ஒரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் உயரும் மக்கள் தொகையால் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இப்படியே தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்தால் வரும் காலங்களில் உணவிலிருந்து பல விஷயங்களில் பஞ்சம், பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளனர்.
ஆனால், உலகின் பல நாடுகளில் இந்தப் பிரச்சினை இல்லை. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் மக்கள் அனைவரும் வேலை, வேலை என்று அதைச் சுற்றியே இருப்பதால் குழந்தை பெற்றுக் கொள்ளுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் அந்நாடுகளில் குழந்தை பிறப்பு குறைந்துள்ளது.

குறையும் மக்கள்தொகை
தென்கொரியா தெற்கு கியோங்சாங் என்ற மாகாணத்தில் உள்ள சாங்வோன் நகரில் பல ஆண்டுகளாகக் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நகரின் மக்கள்தொகை 10 லட்சத்திற்கும் கீழ் செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நகரில் மக்கள்தொகையை அதிகரிக்க உள்ளூரில் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அந்த நகராட்சி எடுத்து வருகிறது.

திருமணம் செய்தால் கடன்
அதன்படி புதிதாகத் திருமணம் செய்து கொண்டு நகரில் குடியோரும் தம்பதிக்கு சுமார் 92 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் 70 லட்ச ரூபாய்) கடனாக வழங்கப்படும் என்றும் அந்நகராட்சி அறிவித்துள்ளது. இந்தத் தொகையை அவர்கள் பொறுமையாக விருப்பப்படி அரசுக்கு செலுத்தினால் போதும்.

கடன் தள்ளுபடி
மேலும், அந்த தம்பதி நகரிலேயே குழந்தையை பெற்றெடுத்தால் கடனுக்கான வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். 2ஆவது குழந்தை பெற்றெடுத்தால் 30% கடன் தொகையும், 3ஆவது குழந்தை பெற்றால் முழு கடன் தொகையும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அந்நகராட்சி அறிவித்துள்ளது.

குறையும் குழந்தை பிறப்பு, அதிகரிக்கும் மரணம்
கடந்த 2020ஆம் ஆண்டில் தென்கொரியாவில் புதிதாக 2.75 லட்சம் குழந்தைகள் பிறந்தன. ஆனால், 3.07 லட்சம் பேர் உயிரிழந்தனர். இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால் வயதானவர்கள் மட்டுமே இருக்கும் நாடு என்ற பெயர் தென் கொரியாவுக்கு வரும். இதைத் தடுக்கவே அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது












Click it and Unblock the Notifications