ஜப்பான் தொழில்நுட்ப உதவியுடன்.. இந்தியாவில் புல்லட் ரயில்! முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து
டோக்கியோ: அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் சென்றிருக்கும் நிலையில், இந்தியா-ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து செயல்படுவோம் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இது 15வது உச்சி மாநாடாகும். இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, 2 நாட்கள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றிருக்கிறார்.

ஜப்பானில் அந்நாட்டு பிரதமர் ஷிகேரு இஷிபாவை, மோடி சந்தித்திருந்தார். இதனைடுத்து இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து செயல்படுவோம் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஜப்பானில் மேலும் அவர் பேசியதாவது,
"இன்றைய எங்கள் கலந்துரையாடல்கள் பயனுள்ளதாக இருந்தன. பெரிய பொருளாதார, ஜனநாயக நாடுகளாக எங்கள் கூட்டணி உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அத்தியாவசியம். வலிமையான ஜனநாயக நாடுகள், சிறந்த உலகத்தை உருவாக்குவதில் இயல்பான கூட்டாளிகள். இந்த கூட்டணியில் புதிய அத்தியாயத்திற்கு இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறோம். முதலீடு, புதுமை, பொருளாதார பாதுகாப்பு, சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், சுகாதாரம், போக்குவரத்து பரிமாற்றங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி அடுத்த பத்தாண்டுகளுக்கான புதிய திட்டத்தை வகுத்திருக்கிறோம்.
இந்த காலத்தில் ஜப்பான் இந்தியாவில் 10 டிரில்லியன் யென் முதலீடு செய்யும். பாதுகாப்புத் துறை மற்றும் புதுமைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவெடுத்திருக்கிறோம். செமிகண்டக்டர்கள் மற்றும் அரிய வகை கனிமங்களை பங்கிட்டுக்கொள்ளுதல் உள்ளிட்ட விஷயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இதில் எங்கள் ஒத்துழைப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications