5 ஆண்டுகளில் முதல் முறை! சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி நாளை சந்திப்பு.. ஏன் முக்கியம்?
மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, நாளை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே இந்த சந்திப்பு நடைபெறுகிறது. பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் எனத்தெரிகிறது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ரஷ்யாவின் கசன் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளனர்.

இன்று ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின. எனினும், இந்தியா தரப்பிலோ சீனா தரப்பிலோ இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில்தான், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி நாளை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே இந்த சந்திப்பு நடைபெறுகிறது. பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் எனத்தெரிகிறது. ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக விளங்கி வரும் இந்தியா - சீனா நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பேச இருப்பது சர்வதெச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியா - சீனா இடையே சமீப காலமாக எல்லையில் சுமூகமான உறவு இல்லை. இதற்கு காரணம் கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் மிகப் பெரிதாக வெடித்தது. அந்த மோதலை தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இரு நாடுகளும் அங்கு தங்கள் வீரர்களைக் குவித்தன. அங்கு வழக்கமான பணிகள் அனைத்தும் தடைப்பட்டன. எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், இந்த பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
எனினும், பெரியளவில் உடன்பாடு ஏற்படாமலேயே இருந்தது. இருப்பினும், ராணுவ ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் தான், எல்லையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எல்லையில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் தனது ரோந்து பணிகளை மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு நடைபெற உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு நடந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஜி ஜின்பிங் - மோடி சந்திப்பு நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications