தீவிரவாதிகள் சதியால் திடீர் மின்தடை: இருளில் மூழ்கிய பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் திடீர் என மின்தடை ஏற்பட்டதால் நாட்டின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின.
மின் பிரச்சனையால் பாகிஸ்தான் தவித்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மின் தடையால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட நாட்டின் 80 சதவிகித பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து நீர் மற்றும் மின் அமைச்சகத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
குட்டு மின்நிலையத்தில் இருந்து மின்சாரத்தை கடத்தும் வழியில் பாதிப்பு ஏற்பட்டதால் இரண்டு மின்நிலையங்களை மூட வேண்டியதாகிவிட்டது என்றார்.
நீர் மற்றும் மின்வாரியத் துறையின் துணை அமைச்சர் ஆபித் ஷேர் அலி கூறுகையில்,
பலுசிஸ்தானில் உள்ள நசீராபாத் மாவட்டத்தில் இருக்கும் மின்சார வழித்தடங்களை தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்துவிட்டனர். அதனால் தான் மின்தடை ஏற்பட்டது என்றார்.
பல்வேறு பகுதிகளில் கோளாறு சரி செய்யப்பட்டு மின் வினியோகம் சீரடைந்துள்ளது. பெட்ரோல் பற்றாக்குறையால் தவித்து வந்த பாகிஸ்தானில் தற்போது மின் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.