40 வருஷம் கழித்து அமெரிக்காவுக்கு ஆபத்து.. மாட்டையே காலியாக்கிடும்! அதென்ன மாமிசம் தின்னும் பராசைட்?
நியூயார்க்: அமெரிக்காவில் அரிதான மனித மாமிசத்தை தின்னும் புழு ( flesh-eating parasite) தொற்று 40 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெரிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் மத்திய அமெரிக்காவுக்கு பயணம் செய்த போது இந்த தொற்றால் பாதிக்கப்பட்டதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஈக்கள் மூலம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு ஆபத்தான தொற்று ஏற்பட்டது. அதுதான் மாமிசத்தை தின்னும் புழு. ஈக்கள் மூலம் இந்த புழுக்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது,
உடல் காயங்கள் மீது ஈக்கள் முட்டை இட்ட பின் அதில் உருவாகும் புழுக்கள் உயிரோடு இருக்கும் திசுக்களை சிறிது சிறிதாக சாப்பிட தொடங்கும். 1950 கால கட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் செத்து மடிந்தன.

மனித மாமிசம் திண்ணும் புழு
கிட்டத்தட்ட 1.8 பில்லியன் டாலர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு இந்த தொற்று முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தொற்று மீண்டும் பதிவாகி இருக்கிறது. மேரிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் தான் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அந்த பெண்ணின் உடலில் New World screwworm fly (Cochliomyia hominivorax) எனப்படும் ஈ தொற்று ஏற்பட்டது.
மாமிச புழு
இந்த ஈ, மனிதர்களும் விலங்குகளும் கொண்டிருக்கும் திறந்த காயங்களில் முட்டை இடும். பிறகு, அதில் பிறக்கும் புழுக்கள் உயிருடன் இருக்கும் திசுக்களைத் தின்னத் தொடங்குகின்றன. இதைச் சரியான நேரத்தில் சிகிச்சை செய்யாவிட்டால் சில நாட்களுக்குள் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள்," அந்த பெண் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். மேலும், அமெரிக்க சுகாதார மற்றும் மனிதவளத் துறை, இந்த தொற்று மனிதர்களுக்கு பரவக்கூடிய ஆபத்து மிகக் குறைவு என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளது.
பராசைட்
எனினும், இந்த பராசைட் வடக்கு நோக்கி பரவி கால்நடைகள் மற்றும் உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிபுணர்களிடையே எழுந்துள்ளது. இந்த தொற்று மூலம் மாடுகள், பன்றிகள், குதிரைகள் போன்ற கால்நடைகள், நாய்கள், பூனைகள், சில நேரங்களில் மனிதர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஒரு மாடு போன்ற பெரிய விலங்கையே கூட இந்த புழுக்கள் ஒரு வாரத்துக்குள் கொல்லக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்கா
1950-களில், அமெரிக்கா sterile insect release முறையின் மூலம் screwworm ஈக்களை அழித்து விட்டது. அடுத்தடுத்து 1982-ஆம் ஆண்டில் தான் அமெரிக்காவில் கடைசியாக உள்ளூரில் தொற்று பதிவு செய்யப்பட்டது. அதற்கு பிறகு, பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து பயணம் செய்து வரும் நபர்களிடம் மட்டுமே தொற்றுகள் கண்டறியப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக நிகராகுவா, கோஸ்டா ரிகா போன்ற நாடுகளில் நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.
எச்சரிக்கை
2023-க்கு பிறகு பலருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இல்லையெனில் புழுக்கள் மூளை அல்லது உள் உறுப்புகளை பாதித்து மரணத்துக்குக் கூட காரணமாக இருந்திருக்கும். இந்த பராசைட் மீண்டும் பரவாமல் தடுக்க சர்வதேச அளவில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இல்லையெனில், இது மனித சுகாதாரத்திற்கும் அமெரிக்காவின் பில்லியன் டாலர் மதிப்புள்ள கால்நடைத் துறைக்கும் கடுமையான அச்சுறுத்தலாக மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications