போர் நிறுத்தம் சாத்தியமா? ரஷ்யா-உக்ரைன் இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை!
இஸ்தான்புல்: ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று இரு நாடுகளும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. 2022க்கு பிறகு இரு நாடுகளும் சேர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதில் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கடந்த மே 16ம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போர் நிறுத்தம் குறித்து எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. ஆனால் கைதிகள் பரிமாற்றத்திற்கான ஒப்புதல் கிடைத்தது. எனவே இரு நாடுகளும் தாங்கள் பிடித்து வைத்திருந்த போர் கைதிகளை பரிமாறிக்கொண்டன. இது ஒரு வகையில் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், முழுமையான போர் நிறுத்தம்தான் தற்போதைய தேவையாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில்தான் தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் உக்ரைன் தரப்பிலிருந்து, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையிலான குழு, ரஷ்ய அதிகாரிகளை சந்திக்கும். ஆனால் ரஷ்யா தரப்பிலிருந்து யார் யார் பங்கேற்பார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இந்த பேச்சுவார்த்தை மற்றொரு விஷயத்திலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது, நேற்றைய தினம் ரஷ்யாவின் 4 விமானப்படை தளத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது. எல்லையை தாண்டி 700-4000 கி.மீ தொலைவில் உள்ள விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டிருப்பது ரஷ்யாவுக்கு கவுரவ குறைச்சலான விஷயமாகும். எனவே இதற்கு சரியான பதிலடியை நிச்சயம் ரஷ்யா கொடுக்கும். இதை வைத்து பார்க்கும்போது இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாது என்றே தெரிகிறது.
போரை நிறுத்த வேண்டும், நாங்கள் 1% கூட போரை விரும்பவில்லை என்று சொல்லும் உக்ரைன், நாளை பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் நேரத்தில் தாக்குதலில் ஏன் ஈடுபட வேண்டும்? 'பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும்' கதைதான் உக்ரைனின் நடவடிக்கை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
போருக்கான காரணம் என்ன?:
உக்ரைன் முன்னாள் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதி. 90களில் சோவியத் ரஷ்யா உடைந்த பிறகு, தனி நாடாக உருவானது. இதுவரை பிரச்சனையில்லை. ஆனால், எப்போது அமெரிக்க ஆதரவை உயர்த்தி பிடிக்க தொடங்கியதோ, அப்போதே ரஷ்யாவுடன் முட்டல் மோதல் தொடங்கிவிட்டது. அமெரிக்கா உடனான உறவை பலப்படுத்த நேட்டோவில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கேட்க, அமெரிக்காவும் ஓகே சொல்ல, ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கியது.
உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், அமெரிக்க படைகள் ரஷ்ய எல்லையில் நிறுத்தப்படும். இது அந்நாட்டுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே நேட்டோவில் உக்ரைன் இணைய கூடாது என்பதுதான் ரஷ்யாவின் கோரிக்கை. இதை ஜெலன்ஸ்கி ஏற்காததால்தான் போர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications