ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 180 குழந்தைகள் உள்பட 2300 பேர் பலி
பெய்ரூட்: சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்ய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 2300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக வெடித்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் ரஷ்ய படைகள் களத்தில் இறங்கி கடும் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் சுமார் 2300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தகவலின்படி, கடந்த மூன்று மாதங்களில் ரஷ்ய வான்வழித் தாக்குதலில் 2371 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 180 குழந்தைகள் உள்பட 792 பொதுமக்கள் பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் 655 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக போராளிக் குழுக்களும், மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.