சிரியா போர்க்களத்தில் செளதியும் குதிக்கிறது... ராணுவத்தை அனுப்புகிறது!!
ரியாத்: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் களமிறங்க ஒரு வழியாக செளதி அரேபியா முடிவெடித்துள்ளது. ஆனால் சிரியாவில் செளதி ராணுவம் இறங்குவதற்கு ஈரான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்து வருகிறது.
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் யுத்தம் நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் அதிபர் அசாத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்கா ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்கு எதிராகவும் ரஷ்யாவும் களமிறங்கியுள்ளது.
அதேபோல் ஈரானும் அசாத்துக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. சிரியா அதிபர் ஷியா முஸ்லிம் என்பதால் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஈரான் நிதி உதவி மற்றும் ராணுவ உதவியை ஆசாத்துக்கு அளித்து வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கமும் சிரியா ராணுவத்துக்கு ஆதரவாக களத்தில் உள்ளது.

20 இஸ்லாமிய நாடுகள்
இந்நிலையில் செளதி அரேபியா தலைமையில் பாகிஸ்தான் உள்ளிட்ட 20 இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து சுமார் 1,50,000 ராணுவத்தினரை சிரியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளன. இதற்கான கூட்டு பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எச்சரிக்கும் ஈரான்
ஆனால் செளதி அரேபியாவின் தலையீட்டை ஈரான் கடுமையாக எதிர்த்து வருகிறது. செளதி அரேபியா தலையிடுவதால் பிரச்சனை இன்னும் கொழுந்துவிட்டு எரியத்தான் செய்யும் என்கிறது ஈரான்.

பிடிவாத செளதி
இதனிடையே செளதி அரேபிய ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அகமது அல் அஸ்ஸிரி, சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளுடன் இணைந்து களமிறங்க சிரியா முடிவு செய்துள்ளது. முதலில் செளதியின் ராணுவத்தை மட்டுமே அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம் என்றார். ஆனால் இதற்கு இன்னமும் அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி ஆகிய நாடுகள் ஒப்புதல் தரவில்லை.

இதுவும் காரணம்
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செளதி ராணுவம் களமிறங்கி கடும் இழப்பை சந்தித்துள்ளது. அத்துடன் செளதி அரேபியா, சன்னி முஸ்லிம்கள் அதிகம் உள்ள நாடு. அது சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினரை வேட்டையாடுவது என்பது சக சன்னி முஸ்லிம்களை அழிப்பது என்பதாகும். இது செளதியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் அமெரிக்காவின் கருத்து.

அமெரிக்கா நிலை
மேலும் அண்மையில் அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து ஈரான், அமெரிக்கா இடையே சுமூக உறவும் வளர்ந்து வருகிறது.

ஈரானின் ஆதிக்கம்
ஏமன், சிரியா என அண்டை நாடுகளில் எல்லாம் ஈரான் கை ஓங்கியே நிற்கிறது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.
ஏற்கனவே ஏமனில் தோல்வி; கச்சா எண்ணெய் விலைவீழ்ச்சியால் நாசமாகும் பொருளாதாரம் என தத்தளிக்கும் செளதிக்கு ஈரானின் ஆதிக்கமும் குடைச்சலாகவே இருக்கிறது. இதனால்தான் சிரியாவுக்குள் கால்வைத்து மேலாதிக்கத்தை நிலைநாட்ட போராடுகிறது செளதி. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சாக்குபோக்கு சொல்லி செளதிக்கு சிக்னல் தராமலேயே இழுத்தடித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications