சோகத்தில் முடிந்த விழிப்புணர்வு சவால்... ஐஸ் பக்கெட் குளியல் போட்ட ஸ்காட்லாந்து வாலிபர் பலி
நியூயார்க்: விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக ஐஸ் பக்கெட் சவாலை எதிர்கொண்ட ஸ்காட்லாந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது ஐஸ் பக்கட் சவால் குறித்து பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. ஏ எல்.எஸ் என்ற நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏ.எல்.எஸ். என்ற அமைப்பு தான் இந்த ‘ஐஸ் பக்கெட் சவால்' குளியலை அறிமுகப்படுத்தியது.
இதுவரை அமெரிக்காவில் இருந்து மட்டும் 9.4 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டு இருப்பதாகவும் இந்த தொகை இன்னும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஐஸ் பக்கெட் சவால் குளியல்...
ஐஸ் பக்கெட் சவால் குளியல் என்பது போட்டியாளர் ஒரு பக்கெட்டில் ஐஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதனை தன் மீது ஊற்றி கொள்ள வேண்டும். அதன் பின்பு அவருக்கு தெரிந்த மூன்று பேரை கைக்காட்ட வேண்டும். அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இது போல செய்ய வேண்டும். இதனை செய்ய தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு 100 டாலர் உதவியாக வழங்க வேண்டும்.
ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்....
இந்த சவால் மூலம் இந்த நோயை பற்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வார்கள், அதேசமயம் இந்த அமைப்புக்கு நிதி உதவியும் கிடைக்கிறது.
குளியல் பரபரப்பு...
இந்த ஐஸ் பக்கட் குளியலை உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்கள் மற்றும் டென்னிஸ் வீரர்களும் பங்கேற்று குளித்து உள்ளனர். அது மட்டுமின்றி தற்போது இந்திய திரையுலக நட்சத்திரங்களையும் இந்த ஐஸ் பக்கெட் குளியல் ஆட்டுவித்து வருகிறது.
ஹன்சிகா, சானியா...
ஐஸ்பக்கெட் குளியல் போட்டவர்கள் பட்டியலில் நடிகை ஹன்சிகா, பிபாஷா பாசு, அபிஷேக் பச்சன், ரித்தீஷ் தேஷ்முக், சானியா மிர்சா ஆகியோர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மாரடைப்பு...
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக இந்த சவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஐஸ் பக்கெட் குளியலில் நிறைய ஆபத்தும் இருக்கத் தான் செய்கிறது. திடீரென மிகக்குளிர்ந்த நீர் உடலில் படுவதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
அதிர்ச்சிப் பலி...
அப்படித் தான் ஸ்காட்லாந்து வாலிபர் ஒருவர் இந்தச் சவாலில் ஈடுபட்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். ஸ்காட்லாந்தை சேர்ந்த கேமரூன் லான்காஸ்டர் ( வயது 18) என்ற வாலிபர் தான் அவர். இவர் பிரஸ்டென் ஹில் குவாரி பகுதியில் கடும் குளிருடன் கூடிய தண்ணீரில் குளிப்பதற்காக குதித்தபோது அதிர்ச்சிகரமாக உயிரிழந்தார்.
விசாரணை....
வாலிபரின் இந்த திடீர் மரணத்தால் ஐஸ் பக்கெட் குளியல் சவாலில் ஈடுபடுபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஸ்காட்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல்முறை...
ஐஸ் பக்கெட் சவாலில் ஈடுபட்டு ஒருவர் மரணமடைந்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் பரபரப்புதொற்றிக் கொண்டுள்ளது.