அடுத்த பேரழிவு? திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய சீன வானம்.. குழம்பி நிற்கும் சீன மக்கள்
பெய்ஜிங்: கொரோனாவில் இருந்தே உலகம் இப்போது தான் மெல்ல மீண்டு வரும் நிலையில், சீனாவில் திடீரென வானம் சிவப்பு நிறத்தில் மாறியது பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. சீனாவில் முதலில் பரவிய கொரோனா உலகெங்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
கொரோனா காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் பொருளாதார பாதிப்பு மோசமாகவே இருந்தது. இப்போது தான் அதிலிருந்து உலகம் மெல்ல மீண்டு வருகிறது.
சீனா
இதனிடையே சீனாவின் கிழக்கு துறைமுக நகரமான ஜூஷானில் எடுக்கப்பட்ட சில படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வெளியான போது, அதை கண்ட நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அதாவது ஜூஷானில் வார இறுதி நாட்களில் வானம் திடீரென சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது. இந்த அரிய நிகழ்வைக் கண்டு பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சிவப்பு நிறம்
முதலில் ஒரு சிலர் தொலை தூரத்தில் ஏற்பட்ட தீவிபத்து என்றே இதை நினைத்துள்ளனர். இன்னும் சிலர் திரைப்படங்களில் வருவதைப் போலப் பேரழிவின் தொடக்கம் இது என்று கருதினர். வானம் கருஞ்சிவப்பு நிறமாக மாறுவதை மக்கள் போட்டோ எடுத்து, இணையத்தில் அதைப் பதிவிட்டுள்ளனர். சீனாவில் உள்ள ட்விட்டர்வாசிகள் பலரும் இந்த படங்களையே பகிர்ந்துள்ளனர்.
குழப்பம்
இது சீன மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்தே இப்போது தான், சீனா மெல்ல மீண்டு வருகிறது. இந்தச் சூழலில் மற்றொரு பேரழிவா என்ற ரீதியிலேயே இணையத்தில் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். இன்னும் சிலர் இது ஏலியனின் வருகையை உணர்த்துவதாகத் தெரிவித்தனர். இந்தச் சூழலில் இதற்கான காரணத்தை ஆய்வாளர்கள் விளக்கி உள்ளனர்.
காரணம்
இதுபோல வானம் சிவப்பு நிறத்தில் மாறுவதற்கு வேறு எதுவும் காரணமில்லையாம். வானிலை ரீதியில் ஏற்படும் மாற்றங்களே இதற்குக் காரணம் என்று சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, வானிலை நிலைமைகள் நன்றாக இருக்கும்போது, வளிமண்டலத்தில் அதிக நீர்த் துளிகளை உருவாக்குகிறது, இந்த நீர் துளிகள், கடலில் இருக்கும் மீன்பிடி படகுகளில் இருக்கும் கண்ணடாடி, இரும்பு போன்ற உலோகங்களில் படும்போது, ஒளிச்சிதறல் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே பொதுமக்கள் பார்க்கும் வானம் சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. மீன்பிடி படகுகளின் ஒளியைச் சிதறுவதாலேயே இதுபோன்ற சிவப்பு நிறங்கள், துறைமுக நகரங்களில் மட்டும் தென்படுகிறது.
|
விளக்கம்
இதற்கிடையில், பல பயனர்கள் சிவப்பு நிறமாக மாறுவதற்குச் சூரிய செயல்பாடு ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என்று கூறினர். மேலும், 1770ஆம் ஆண்டு தொடர்ந்து ஒன்பது நாட்கள் வானம் சிவப்பாக இருந்த நிகழ்வையும் அவர்கள் ஒப்பிடுகின்றனர். இதுபோன்ற கோட்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வானம் சிவப்பு நிறத்தில் மாறியபோது, சூரிய மற்றும் புவி காந்த செயல்பாடு வழக்கம் போலவே இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.