ருத்ர தாண்டவம் ஆடிய டிட்வா புயல்.. 100க்கும் மேற்பட்டோர் பலி! எமர்ஜென்சியை அறிவித்தது இலங்கை
கொழும்பு: வங்கக்கடலில், இலங்கைக்கு அருகே உருவாகியிருந்த டிட்வா புயல் இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவு, கனமழை என கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை 130க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர்.
நிலைமையை சமாளிக்க 'ஆபரேஷன் சாகர் பந்து' மூலம் இலங்கைக்கு இந்தியா உதவி பொருட்களை அனுப்பியுள்ளது. இன்று காலை 21 டன் நிவாரண பொருட்கள் இரண்டு ராணுவ விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக நேற்று 6 டன் அளவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 80 பேர் மற்றும் 2 சீட்டாக் ஹெலிகாப்டருடன் ஐஎன்எஸ் விக்ராந்த் இலங்கைக்கு மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். இதுவரை விமானங்கள் மற்றும் கப்பல் மூலமாக 27 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
புயல் காரணமாக இலங்கையில் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பயணிகளுக்கு உதவுவதற்காக ஒரு அவசர உதவி மையத்தை நிறுவியுள்ளது. விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியப் பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் உட்பட அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் வழங்கி வருகிறது. சிக்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இலங்கை முழுவதும் தற்போது அவசர நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது புயல் இலங்கையை விட்டு நகர்ந்திருப்பதால், மீட்பு பணிகளை தீவிரப்படுத்த இந்த அவசர நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராணுவம், போலீஸ், சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து செயல்பட இந்த அவசர நிலை அறிவிப்பு மிக முக்கியமானதாகும். உயிரிழப்பு ஒரு பக்கம் இருந்தாலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இதுவரை 172 பேரை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
புயல் 15,000க்கும் மேற்பட்ட வீடுகளை நாசப்படுத்தியுள்ளது. இதனால், 78,000 பேர் அரசு நடத்தும் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அனுராதபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் ஒரு ஜெர்மன் நாட்டவர் உட்பட 69 பேர் மாட்டிக்கொண்டனர். அவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இலங்கை ராணுவம் மீட்டிருக்கிறது.
கண்டியில் இருந்து 115 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய மாவட்டமான பதுளாவில் மழை வெள்ளம் சாலைகளை துண்டித்திருக்கிறது. இதன் காரணமாக நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல நிலச்சரிவும் மீட்பு பணிகளை தாமதப்படுத்தியிருக்கிறது. நிலைமையை சமாளிக்க இலங்கை சர்வதேச உதவியை நாடியிருக்கிறது.
முன்னதாக கடந்த 2017ம் தேதி இலங்கையில் ஏற்பட்ட மழை வெள்ளம் 200 பேரை பலி வாங்கியது. அதற்கு பின்னர் இலங்கை சந்தித்த மிக மோசமான இயற்கை பேரிடராக டிட்வா புயல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications