ஒரு போட்டோ எடுத்துக்கலாமா பாஸூ... போராட்டக்காரர்களை புன்னகையால் தாக்கிய போலீஸார்
பாங்காக்: ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதிப் படுத்த புதிய டெக்னிக் ஒன்றைப் பயன் படுத்தியுள்ளனர் தாய்லாந்து போலீசார். அதன்படி, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் புகைப்படம் எடுத்து சமாதானத் தூது அனுப்பியுள்ளனர்.
பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றான தாய்லாந்தில் பிரதமருக்கு எதிராக தொடரும் போராட்டத்தால், சுற்றுலாப் பயணிகளை இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் எச்சரித்திருந்தன. விரைவில் தொடங்க உள்ள சீசனிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை தொடரும் போராட்டங்கள் பாதிக்கும் என அஞ்சிய அந்நாட்டு அரசு, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது.
அதன் முதற்கட்டமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைதிப்படுத்த அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர் தாய்லாந்துப் போலீசார்.

தொடரும் போராட்டங்கள்....
கிட்டத்தட்ட ஒரு வாரகாலமாக தாய்லாந்தில் பிரதமர் இங்க்லக் ஷினவத்ராவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்திற்கு அந்நாட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுதெப் தாக்சுபன் தலைமை வகித்து வருகிறார்.

மீண்டும் வெற்றி...
பிரதமரைப் பதவி விலகக் கூறி, ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து பிரதமருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அதில் பிரதமரே மீண்டும் வெற்றி பெற்றார்.

அமைதித் தீர்வு....
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிரதமர் ஆர்ப்பாட்டக்காரர்களிடமும் அமைதியான முறையிலேயே தீர்வு காண நினைத்தார். இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து நேற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.

கண்ணீர்ப் புகைக்குண்டு....
பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர்ப் புகையையும் அவர்களை நோக்கிப் பிரயோகித்தனர். தண்ணீரைப் பீய்ச்சியடித்தன் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை அவர்கள் வெளியேற்ற முயன்றனர்.

மரண தண்டனை....
இந்நிலையில், குற்றவியல் நீதிமன்றம் ஒன்று இவர்களுக்குத் தலைமை தாங்கிய தாக்சுபனுக்கு மரணம் அல்லது ஆயுள்தண்டனையை விதிக்கக்கூடிய கைது உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது. ஆனபோதும், தாங்கள் வெல்லும்வரை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் போராடுவோம் என தாக்சுபன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

வலியுறுத்தல்....
இருந்தபோதும், விரைவில் தாய்லாந்தின் சுற்றுலா சீசனின் முக்கிய பருவம் தொடங்க உள்ளதாலும், நாளை தாய்லாந்து அரசரான பூமிபோல் அதுல்யதேஜின் 86 ஆவது பிறந்த நாள், தாய்லாந்து மக்களால் பெரிதும் மதிக்கப்படும் அவரது பிறந்த நாளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அவரை அவமதிப்பது போலாகும் என்பதாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் தங்களுடைய போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தப் பட்டு வருகின்றனர்.

புகைப்படம்....
அதன் எதிரொலியாக, ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதிப் படுத்தும் விதமாக காவலதிகாரிகள் புதிய யுக்தி ஒன்றை கையாண்டுள்ளனர். அதன்படி, தடுப்பு வேலிகளை விலக்கி, தங்கள் ஆயுதங்களையும் கீழே வைத்த பாதுகாப்பு வீரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறை அலுவலகத்துக்குள் வரவேற்றனர். அவர்களுடன் ஒன்றாக புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

அரசின் புதிய கொள்கை....
அதனைத் தொடர்ந்து, பிரதமரின் அலுவலகமும் அவர்களுக்காகத் திறக்கப்பட்டது.. மோதல் நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினரைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய காவல்துறை தலைவரான கம்ரோன்விட் தூப்கிரசங் மோதலைத் தவிர்க்கவேண்டும் என்பது அரசின் கொள்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications