அமெரிக்காவில் 3000 தடவை விளக்கத்துடன் உச்சரிக்கப்பட்ட திருக்குறள்!
மில்பிடஸ்(யு.எஸ்): அமெரிக்காவில் தமிழர்கள் பெருமளவில் வசித்து வரும் கலிஃபோர்னின்யாவின் சான்ஃப்ரான்சிஸ்கோ பகுதியில் குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டியை விரிகுடா கலைமன்றம் நடத்தியுள்ளது.
இங்கு கலிஃபோர்னியா தமிழ் அகாடமியின் பள்ளிகள் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தமிழ் பயின்று வரும் வேளையில், இத்தகைய போட்டி இதுவே முதன் முறையாகும்.

ஃப்ரீமாண்டில் போட்டி - மில்பிடஸில் பரிசளிப்பு
சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஹார்னர் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் இரண்டரை வயது முதல் பதினேழு வயதுக்குட்பட்ட 214 குழந்தைகள் பங்கேற்றனர். மொத்தமாக 3000 தடவைகள் திருக்குறள் விளக்கத்துடன் ஒப்புவிக்கப்பட்டது. மாலை 6 மணி அளவில் மில்பிடஸ் ஜெயின் கோவில் வளாக அரங்கத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

டல்லாஸிலிருந்து வேலு ராமன்
டல்லாஸில் ஐந்து வருடங்களுக்கு மேலாக திருக்குறள் போட்டியை நடத்திவரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் வேலு ராமன் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். உடன் டெஸ்லா சி.ஐ.ஓ ஜெய் விஜயன், பிரபல தொழிலதிபர் கே.பி.சந்திரசேகர் மற்றும் அமெரிக்க தமிழறிஞர் டாக்டர் ஜார்ஜ் ஹாட் ஆகியோரும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தேனீக்கள் போல் அமெரிக்க தமிழ்க் குழந்தைகள்
கே.பி.சந்திரசேகர் பேசும் போது, "அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் ஒரே நேரத்தில் பல வேடங்கள் ஏற்று நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். பள்ளியில் படிப்பு, மாலையில் விளையாட்டுப் போட்டி, வீட்டில் பெற்றோர்களுடன் தமிழ்க்குடும்ப சூழல், அக்கம் பக்கத்து இந்தியக் குழந்தைகளுடன் நட்பு, குடும்ப நண்பர்கள் குடும்பத்துடன் விருந்து, தாத்தா பாட்டியுடன் மழலைப் பேச்சு என பல சுமைகளுடன் தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையிலும் தமிழ்ப் பள்ளி செல்வது மட்டுமல்லாமல் இந்த போட்டிக்காக திருக்குறளும் கற்று வந்து கலந்து கொண்டார்கள் என்றால் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நிச்சயமாக நம் அனைவரை விடவும் அதிகமாக இந்த குழந்தைகள் உழைக்கிறார்கள் என்று புகழ்ந்தார்.

தமிழை மறவாதீர்! - ஜார்ஜ் ஹாட்
கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் தமிழறிஞர் டாக்டர்.ஜார்ஜ் ஹாட் தமிழின் பெருமைகளை எடுத்துரைத்தார். அதைப் பேணிக்காக்க வேண்டிய அவசியத்தையும் கூறினார்.

தமிழில் பேசுங்கள் - டெஸ்லா விஜயன்
டெஸ்லா சி.ஐ.ஓ ஜெய் விஜயன் பேசுகையில், "வீட்டில் குழந்தைகளுடன் கட்டாயம் தமிழில் பேசுங்கள். நமது மொழியின் பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் வேளையில், நமது முன்னோர்களின் சாதனைகளையும் தெரியப்படுத்துங்கள். கட்டுமரம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளது என்றால் நம் முன்னோர்கள் அந்தந்த துறைகளில் செய்த சாதனைகளே காரணம். டெஸ்லா நிறுவனர் எலான் மாஸ்க் போல், நம் தமிழர்களும் புதுப்புது சாதனைகள் படைக்கும் வல்லமை கொண்டவர்கள். சாதிக்க தூண்டுவதற்கு ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர்கள் தயார்படுத்த வேண்டும்," என்றார்.

குழந்தைகளின் சாதனையை கொண்டாடுவோம்
வேலு ராமன் பேசுகையில், "இது குழந்தைகளை கொண்டாட வேண்டிய தருணம். அமெரிக்க மண்ணிலே பிறந்த நம் குழந்தைகள், வள்ளுவரின் வாய்மொழியை படித்து, புரிந்து தங்கள் மழலைக் குரல்களில் ஆராதனை செய்திருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியில் டல்லாஸ் தமிழ்க் குடும்பங்கள் சார்பில் நானும் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
திருக்குறள் மூலம் நமது மொழியின் வலிமையை இந்த குழந்தைகள் அறிந்து கொள்கிறார்கள். தமிழ் மொழியுடன் இயல்பான ஈர்ப்பு உண்டாகிறது. அவர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் கொண்டு அதனை பேணிக்காக்கும் எண்ணம் உருவாகிறது. அமெரிக்காவில் தமிழ் இனி நிச்சயம் தழைத்தோங்கும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்படும்," என்றார்.

கிருஷ்ண லீலாவும் சாம்ராட் அசோகனும்
விழாவில் திருக்குறள் பற்றிய சொற்பொழிவு, குழந்தைகளின் கிருஷ்ண லீலா நாட்டிய நாடகம், திருக்குறளுக்கு பரத நாட்டிய நடனம், திரையிசை நடனம், வீணை இசை உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன, சாம்ராட் அசோகன் நாடகத்தில் அசோக சக்ரவர்த்தியாக நடித்த சிறுமி ஸ்ருதி அனைவரது பாராட்டுகளையும் பெற்றாள்.

ஒரு குறளுக்கு ஒரு டாலர்
முன்பு டல்லாஸில் நடந்த திருக்குறள் போட்டியில் தந்தது போல, திருக்குறள் சொன்ன மழலைகளுக்கு ஒரு குறளுக்கு ஒரு டாலர் பரிசளிக்கப்பட்டது.

600 பேர்..
சுமார் 600க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணியை அகஸ்தீஸ்வரன் மற்றும் சித்ரா ஏற்றிருந்தனர். உடன் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் இணைந்து பணியாற்றினர். விழாவில் பாரதி கலை மன்ற தலைவர் ஸ்ரீகாந்த், வளைகுடா தமிழ் மன்றம் தலைவர் சோலை ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். விரிகுடா கலை மன்றத்தின் இணை நிறுவனர் சங்கர் பிரசன்னன் வரவேற்புரை ஆற்றினார்.
அமெரிக்கத் தமிழ் நடிகரும் விரிகுடா கலை மன்றத்தின் நிறுவனருமான திருமுடி துளசிராமன் நன்றியுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications