மரண விளிம்பில் தாயோடு தப்பிய மாணவர்.. காரணம் ‛வாட்ஸ்அப்’.. துருக்கி பூகம்பத்தில் நெகிழ்ச்சி-எப்படி?
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் வாட்ஸ்அப் மூலம் தாயுடன் உயிர் பிழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்காரா: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 6 நாளாக மீட்பு பணிகள் விரைவாக நடந்து வரும் நிலையில் இடிபாடுகளில் சிக்கிய கல்லூரி மாணவரும், அவரது தாயும் வாட்ஸ்அப் உதவியால் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது எப்படி சாத்தியமானது? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
துருக்கி, சிரியா ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தான் கடந்த 6 ம் தேதி துருக்கியின் காசியான்டெப் நகரில் தொடர்ந்து 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. முதல் நிலநடுக்கம் அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்டது.
இந்த நகர் துருக்கி-சிரியா எல்லையில் அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கம் சிரியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவுகோலில் 7.8, 7.5 மற்றும் 6 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானதால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் ஏராளமானவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

தொடர்ந்து அதிகரிக்கும் பலி
பல ஆயிரம் மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனால் துருக்கி, சிரியா நாட்டுக்கு இந்தியா உள்பட அனைத்து உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியா உள்பட பல நாடுகள் மீட்பு படையினரை அங்கு அனுப்பி வைத்துள்ளதோடு மருந்து, உணவு பொருட்களை வழங்கி உள்ளன. தற்போது அங்கு பல நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி இருநாடுகளிலும் சேர்த்து பலி எண்ணிக்கை என்பது 24 ஆயிரத்தை எட்டியதாக கூறப்படுகிறது. மேலும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயம், படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரை காப்பாற்றிய வாட்ஸ்அப்
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய கல்லூரி மாணவரும், அவரது தாயும் வாட்ஸ்அப் உதவியால் மீட்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது எப்படி நடந்தது? இடிபாடுகளுக்குள் சிக்கி மரணத்தின் விளிம்புக்கே சென்றாலும் கல்லூரி மாணவர் சமயோஜிதமாக யோசித்து செயல்பட்டு தன்னையும், தனது தாயையும் காத்து கொண்டது எப்படி? என்ற தகவல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. அதன் விபரம் வருமாறு:

கல்லூரி மாணவர்
துருக்கியில் உள்ள மலாட்டியா பகுதியை சேர்ந்தவர் போரன் குவெத் (வயது 20). இவர் இஸ்தான்புல் நகரில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் தான் விடுமுறையையொட்டி அவர் தனது குடும்பத்தினரை பார்க்க இஸ்தான்புல்லில் இருந்து மலாட்டியாவுக்கு சென்றார். பிப்ரவரி 6ம் தேதி போரன், தனது தாய், பாட்டி மற்றும் 2 உறவினர்கள் ஆகியோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2வது மாடியில் அமைந்திருக்கும் வீட்டில் இருந்தனர்.

குடும்பத்துடன் சிக்கிய மாணவர்
இந்த வேளையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு அப்படியே சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. இதனால் போரன் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்த வேளையில் அதிர்ஷ்டவசமாக போரன் சிறுகாயங்கள் மட்டுமே அடைந்தார். மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் தன்னுடன் செல்போன் வைத்திருந்தார்.

வாட்ஸ்அப்பில் லோகேஷன் ஷேர்
இதையடுத்து அவர் தனது லோகேஷனை வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு ஷேர் செய்தார். மேலும் தன்னை காப்பாற்றும்படி கண்ணீர் மல்க அவர் வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த மற்றவர்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பத்திரமாக மீட்பு
இதையடுத்து லோகேஷன் அடிப்படையில் மீட்பு படையினர் விரைந்து போரனையும், அவரது தாயையும் பத்திரமாக மீட்டனர். இதுபற்றி போரன் கூறுகையில், ‛‛அதிர்ஷ்டவசமாக என்னிடம் செல்போன் இருந்தது. வாட்ஸ்அப்பில் லோகேஷன் ஷேர் செய்தது மற்றும் ஸ்டேட்டஸ் வைத்தது மூலம் உடனடியாக உதவி கிடைத்தது. நானும், எனது தாயும் மீட்கப்பட்டுள்ளோம். இருப்பினும் 2 உறவினர்கள் மற்றும் பாட்டியின் நிலை என்ன என்று தெரியவில்லை. அவர்களை தேடி வருகிறோம்'' என்றார்.

உதவும் வலைதளங்கள்
துருக்கியில் இன்டர்நெட் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட போஸ்ட் மூலம் மீட்பு படையினர் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் போரன், அவரது தாய் மட்டுமின்றி இன்னும் பலபேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சமீபத்தில் அந்தநாட்டின் பிரபல யூடியூபர் பிராத் யாய்லா கட்டட இடிபாடுகளில் சிக்கியது பற்றிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டார். இதை பார்த்து அவரை அவரது ரசிகர்கள் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications