துருக்கிக்கு நடுவே "300 கிமீ நீளத்திற்கு பெரிய விரிசல்!" நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு! பகீர்
துருக்கி நிலநடுக்கம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி: துருக்கி நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நிலநடுக்கம் அங்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த நிலநடுக்கம் குறித்த சாட்டிலைட் படங்கள் அங்கு மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
கடந்த வாரம் துருக்கியில் மிகப் பெரியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் அளவுகோலில் 7.8ஆக பதிவாகியிருந்தது. அதிகாலையில் பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன.
பொதுமக்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. இதனால் பாதிப்புகள் மிக மிக மோசமான நிலையை அடைந்தது.

நிலநடுக்கம்
அத்துடன் இது நிற்கவில்லை.. அன்றைய தினமே 7.5 மற்றும் 6 ரிக்டர் அளவுகோல் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதன் பின்னரும் கூட அடுத்தடுத்து தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. முதல் நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்த கட்டிடங்களும் கூட.. இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் அப்படியே சரிந்தன. இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது. துருக்கி மட்டுமின்றி சிரியா நாட்டிலும் இந்த நிலநடுக்கம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

மோசமான பாதிப்பு
இக்கட்டான நிலையில் இருக்கும் துருக்கி நாட்டிற்கு உதவுவதாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளனர்.. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.. சிரியாவில் மட்டும் இதுவரை 4 ஆயிரம் பேர் நிலநடுக்கம் காரணமாகப் பலியாகி உள்ளனர்.. அதேபோல இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், சிரியாவில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோரும் காயமடைந்துள்ளனர்.

விரிசல்
அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.. இதற்கிடையே இங்கிலாந்தின் பூகம்பங்கள், எரிமலைகள் மற்றும் டெக்டானிக்ஸ் கண்காணிப்பு மைய (COMET) ஆய்வாளர்கள் நிலநடுக்க பாதிப்பு குறித்து விளக்கும் சாட்டிலைட் படங்களைப் பகிர்ந்துள்ளனர். இதில் துருக்கியில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது தெளிவாகப் பதிவாகியுள்ளது. துருக்கிக்கு நடுவே மிக நீண்ட தூரத்திற்கு நீளும் இரண்டு விரிசல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

300 கிலோமீட்டர்
இரண்டு விரிசல்களில் பெரியது என்றால் அது மத்தியதரைக் கடலின் வடகிழக்கு முனையிலிருந்து வடகிழக்கே 300 கிலோமீட்டர்கள் நீண்ட ஒரு விரிசலாகும். அடுத்து விரிசல் 125 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இது இரண்டாவது பூகம்பத்தின் போது கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் கழித்து ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் எந்தளவுக்குப் பெரிய அழிவின் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது என்பதை இந்த பெரிய விரிசல்கள் தெளிவாகக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக 425 கிமீ நீளத்திற்கு இந்த இரண்டு விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

ஆய்வாளர்கள் எச்சரிக்கை
இது குறித்து இங்கிலாந்தின் பூகம்பங்கள், எரிமலைகள் மற்றும் டெக்டானிக்ஸ் கண்காணிப்பு மைய தலைவர் டிம் ரைட் கூறுகையில், "பெரிய நிலநடுக்கம், பெரிய ஃபால்ட் லைனை ஏற்படுத்துகிறது.. இது பெரிய ஃபால்ட் லைனை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில மணி நேர இடைவெளியில் இதுபோன்ற இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்படுவது மிக மிக அரிய நிகழ்வு.. நிலநடுக்கம் காரணமாக மேற்பரப்பில் தெளிவாகத் தெரியும் அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது" என்றார்.

சாட்டிலைட்
இப்போது இந்த அமைப்பு வெளியிட்டுள்ள சாட்லைட்ட படங்களும் இதையே உறுதி செய்துள்ளன. இது சென்டினல்-1 சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்களாகும். இந்த சென்டினல்-1 சாட்டிலைட் 700 கிலோமீட்டர்கள் உயரத்தில் துருக்கியின் மீது வடக்கிலிருந்து தெற்கே பயணித்த போது இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் பகல், இரவு என எந்த நேரத்திலும் நிலத்தை நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் பகுதியை ஸ்கேன் செய்யும்.. பூமியின் மேற்பரப்பில் உயரத்தில் அடிக்கடி ஏற்படும் மாறுபாடுகளையும் இது கண்காணிக்கிறது.












Click it and Unblock the Notifications