"சத்தியமா நாங்கள் இல்லை!" ரஷ்யாவில் வெடித்த எண்ணெய் கிடங்கு.. அவசர அவசரமாக மறுத்த உக்ரைன்.. பின்னணி
கீவ்: உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் மெல்ல உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவில் எண்ணெய் கிணற்றைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. இந்தத் தாக்குதல் 38ஆவது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் பல பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் உக்ரைன் நாட்டில் இருந்து பல ஆயிரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும், பல லட்சம் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறினர்.

பேச்சுவார்த்தை
இந்தப் போர் தொடங்கியதில் இருந்து இரு தரப்பிற்கும் இடையே தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இதில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேநேரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது. குறிப்பாக, நடுநிலை நிலைப்பாட்டை எடுக்க உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்தது.

தாக்குதல்
அதேபோல உக்ரைன் நாட்டில் இருக்கும் ராணுவத்தைக் குறைக்கவும் ரஷ்யா ஒப்புக் கொண்டது. இந்தச் சூழலில் ரஷ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது, இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தாழ்வாகப் பறந்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக அப்பகுதி பிராந்திய ஆளுநர் கூறி உள்ளார். ரஷ்ய எண்ணெய் கிடங்கை உக்ரைன் ராணுவமே தாக்கியதாகத் தகவல் வெளியானது.

நாங்கள் இல்லை
அமைதி பேச்சுவார்த்தையில் இப்போது தான் உடன்பாடு ஏற்படத் தொடங்கி உள்ள நிலையில், இந்தத் தாக்குதல் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இந்தச் சூழலில் உக்ரைன் ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உக்ரைன் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில காரணங்களுக்காக இந்தத் தாக்குதலை நாங்கள் நடத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் எங்கள் ராணுவத்திடம் இருந்து கிடைத்த தகவல்களின்படி ரஷ்யாவின் இந்தத் தகவல் உண்மைக்கு மாறாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.

மறுப்பு
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலெக்சாண்டர் மோட்டுஸ்யானிக், இந்தத் தாக்குதலில் உக்ரைன் பங்கு உள்ளதா இல்லை என விளக்க மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், "உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஆரம்பித்துள்ள இந்தப் போரைத் தடுக்க தற்போது ஒரு தற்காப்பு நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருகிறோம்.. ஆனால் அதற்காக ரஷ்யாவில் நடக்கும் அனைத்து தாக்குதலுக்கும் உக்ரைன் பொறுப்பு என்று அர்த்தமல்ல" என்று அவர் கூறினார்.

செர்னோபில் அணுமின் நிலையம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், 1986 பேரழிவுக்குப் பின்னர் செயல்படாமல் இருந்த செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து ரஷ்ய வீரர்கள் வெளியேறினர். அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாகவே செர்னோபில் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்யா வெளியேறியதாகக் கருதப்பட்டது. இருப்பினும், செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து ரஷ்ய வீரர்கள் அதிக அளவு கதிரியக்கத்தைப் பெற்றதாகவும் இதன் காரணமாகவே அங்கிருந்து ரஷ்ய வீரர்கள் வெளியேறி உள்ளதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது.
Recommended Video

ரஷ்ய வெளியுறவுத் துறை
மேலும், உக்ரைன் போருக்கு இடையே ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று முன்தினம் டெல்லி வந்தார். நேற்றைய தினம் முதலில் அவர் அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியைச் சந்தித்த அவர், சுமார் 40 நிமிடங்கள் மோடி உடன் உரையாடினார். உக்ரைன் போருக்குப் பின்னர், ரஷ்யாவின் உயர்மட்ட அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications