அவங்க பிளானே வேற! உக்ரைன் உடன் நிற்காது..மெகா போரை தொடங்கும் ரஷ்யாவின் திட்டம்! பரபர போரிஸ் ஜான்சன்
லண்டன்: உக்ரைன் விவகாரத்தில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. ரஷ்யா தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், எல்லையில் ரஷ்யா படைகள் அதிகரித்தே வருகிறது.
சில வாரங்களில் மட்டும் உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்யப் படைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. அதேபோல சுமார் 50% ரஷ்ய ராணுவம் தாக்கத் தயாரான நிலையில் உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

உக்ரைன் விவகாரம்
இப்படி ரஷ்யா - உக்ரைன் விவகாரம் குறித்து வெளிவரும் செய்திகள் தொடர்ந்து பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலேயே உள்ளது. இதனால் சர்வதேச சந்தையிலும் கூட கச்சா எண்ணெய் விலை மளமளவென உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும்பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் 1.90 லட்சம் ராணுவ வீரர்களைக் குவித்துள்ளதாகவும் ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போரைத் தொடங்கும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பிரிட்டன் பிரதமர்
இதனிடையே ஐரோப்பா மீது ரஷ்யா போர் தொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மியூனிக்கில் அவர் அளித்த பேட்டியில், "உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கும்பட்சத்தில் இதுவரை இல்லாத வகையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவிக்க உள்ளோம். ரஷ்யா நிறுவனங்கள் பிரிட்டன் பவுண்டுகள் மற்றும் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்படும். இது ரஷ்யப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

என்ன திட்டம்
ரஷ்யா இப்போதே போரை ஆரம்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அனைத்து ஆதாரங்களும் அதையே தான் காட்டுகின்றன. இதில் மறைக்க எதுவும் இல்லை. வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் ஏற்கனவே தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டனர். கிழக்குப் புறத்தில் இருந்து டான்பாஸ் வழியாக உக்ரைனுக்குள் நுழைவது மட்டும் அவர்கள் திட்டமில்லை. மாறாக பெலாரஸ் மற்றும் கியேவைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்தும் கூட அவர்கள் தாக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க உளவுத் துறையும் இதைத் தான் கூறியதாக அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பா மீது போர்
1945ஆம் ஆண்டிற்குப் பின்னர், ஐரோப்பா மீது ஒரு மாபெரும் போரைத் தொடங்க ரஷ்யா திட்டமிட்டிருக்கலாம். இது உண்மையில் அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்று. உக்ரைன் மீது போர் தொடுக்கும் போது, உக்ரைன் மக்கள் மட்டும் உயிரிழக்க மாட்டார்கள். ரஷ்ய இளைஞர்களும் கூட உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளன.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், அது அத்துடன் நின்றுவிடாது. உலகம் முழுவதும் கண்டிப்பாக எதிரொலிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

ரஷ்யா
ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்றும் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்து வருவதாகவும் மேற்குலக நாடுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இருப்பினும், உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன
சோவித் யூனியன் இருந்த போது ஒரே நாடாக இருந்த ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக இடைவெளி அதிகரித்து வருகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தொடர்பாக உக்ரைன் ஆலோசித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது தனக்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தலாகக் கருதுகிறது ரஷ்யா. இதன் காரணமாகவே ரஷ்யா உக்ரைன் எல்லையில் ராணுவத்தைக் குவித்து வருகிறது.












Click it and Unblock the Notifications