அமெரிக்க போலீஸால் இந்தியர் தாக்கப்பட்ட வழக்கு... தீர்ப்பு எழுத தலையை பிய்த்துக்கொள்ளும் நீதிபதிகள்
வாஷிங்டன்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ்பாய் படேல் என்ற முதியவர் அமெரிக்க போலீசாரால் தாக்கப்பட்ட வழக்கில், விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் இறுதி முடிவு எடுப்பதற்காக நீதிபதிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ்பாய் படேல் (57), அமெரிக்காவின் அலபாமா மாவட்டத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்றிருந்தார். சம்பவம் நடந்த நாளன்று வெளியே ‘வாக்கிங்' சென்ற போது போலீசார் அவரை பலமாக தாக்கியதில் கீழே விழுந்த அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.
அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பிலும், மத்திய அரசு சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதான தாக்குதல் இன வெறி தாக்குதல் என குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து சுரேஷ்பாய் படேலை தாக்கிய போலீஸ் அதிகாரி எரிக் பார்கர்(27) கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமினில் விடுதலை ஆனார். தொடர்ந்து போலீஸ் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் எரிக் பார்க்கர் இந்த வழக்கு விசாரணை முரண்பாடான முறையில் நடந்து முடிந்ததாகக்கூறி ஒரு மனு தாக்கல் செய்தார். அதனையடுத்து அலாபாமாவில் உள்ள ஹன்ட்ஸ்வில் மாவட்ட கோர்ட்டில் இவ்வழக்கின் மறுவிசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், சுரேஷ்பாய் படேல் முதல்கட்ட விசாரணைக்காக கடந்த மாதம் நீதிமன்றத்துக்கு வந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் ஒரு மொழிபெயர்பாளர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீதிபதியிடம் தனக்கு சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது பற்றி நேரடியாக சாட்சியமளித்தார். அப்போது நீதிபதி அவரிடம், "சாலையில் சென்ற உங்களை போலீஸ் விசாரிக்கும் போது உங்கள் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எதையாவது எடுக்க முயற்சித்தீர்களா?, போலீசிடமிருந்து தப்பித்து ஓட முயற்சித்தீர்களா?" என்று கேட்டார். அதற்கு நான் அப்படி எதுவும் செய்யவில்லை என சுரேஷ்பாய் படேல் பதில் சென்னார்
இந்நிலையில், இந்த வழக்கில் இறுதி முடிவு எட்டப்படுவதில் நீதிபதிகளுக்கிடையே பெரும் குழப்பம் நிலவுவதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, நீதிபதிகளுக்கிடையே கடந்த மூன்று நாட்களாக நடந்துவந்த விவாதத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. தீர்ப்பை அறிவிப்பது தொடர்பாக 9 பெண்கள் உள்ளிட்ட 12 நீதிபதிகள் கொண்ட குழுவினருக்குள் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, நேற்று 11 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே கூட்டம் நிறைவு பெற்றது. இதற்கிடையில், நீதிபதிகள் குழுவில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை தீர்ப்பு வெளியானால், குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் போலீஸ்காரர் எரிக் பார்கருக்கு சுமார் பத்தாண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதுதொடர்பாக, நீதிபதிகள் குழு இன்று மீண்டும் கூடி, ஆலோசனை நடத்தி, தங்களது முடிவை ஹன்ட்ஸ்வில் மாவட்ட நீதிபதி மாடெலைன் ஹுகெஸ் ஹைகாலாவிடம் சமர்ப்பிப்பார்கள் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications