நாங்க அண்ணன் - தம்பி.. எங்களை பிரிக்கவே முடியாது.. இந்தியாவுக்கு எர்டோகன் - ஷெபாஸ் தந்த வார்னிங்
அங்காரா: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதலில் துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தானுக்கு உதவினார். நேற்று துருக்கியில் வைத்து எர்டோகனை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவுத்தகவல்களை வழங்க துருக்கி முடிவு செய்துள்ளதோடு, நாங்கள் 2 பேரும் அண்ணன் - தம்பி. எங்களை பிரிக்க முடியாது என்று நம் நாட்டுக்கு இருவரும் வார்னிங் செய்வது போல் மெசேஜ் அனுப்பி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானை தாக்கியது. நம் நாட்டின் ஏவுகணைகளை பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், 3 விமானப்படை தளங்களை அழித்தது.

பாகிஸ்தான் நம்மை தாக்க மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. நம் நாட்டின் பதிலடியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சரண் அடைந்தது. பேச்சு வார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு துருக்கி பெரியளவில் உதவியது. துருக்கி நாட்டின் ட்ரோன்களை வைத்து தான் பாகிஸ்தான் நம்மை சீண்டியது. இந்த ட்ரோன்களை இயக்க பாகிஸ்தானுக்கு துருக்கி தனது ஆபரேட்டர்களை அனுப்பி வைத்தது. இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில் துருக்கி நம்மை சீண்டியது.
பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு நம்மை கண்டித்ததோடு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக தான் இருப்போம் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகனே நேரடியாக அறிவித்தார். இதையடுத்து துருக்கியை நம் நாட்டு வர்த்தகர்கள், சுற்றுலா செல்லும் மக்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இது துருக்கிக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் துருக்கியின் உதவிக்கு நன்றி சொல்ல பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துருக்கிக்கு சென்றார். துருக்கியின் இஸ்தான்புல்லியில் அதிபர் எர்டோகனை சந்தித்து ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார். மேலும் இருநாடுகள் இடையேயான உறவை பலப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. வர்த்தகம், பாதுகாப்பு துறை, உளவுத்தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் இன்னும் இருநாடுகளும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. அதனை துருக்கி அதிபர் எர்டோகன் ஏற்றுக்கொண்டார்.
துருக்கி - பாகிஸ்தான் கூட்டணி என்பது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இஸ்தான்புல்லில் இன்று (அதாவது நேற்று) மாலையில் அன்பு சகோதரர் அதிபர் எர்டோகனை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். சமீபத்திய பாகிஸ்தான்-இந்தியா மோதலில் பாகிஸ்தானுக்கு அவர் அளித்த உறுதியான ஆதரவு தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்தேன். இருநாடுகள் இடையேயான வர்த்தகம், முதலீடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். இருநாடுகள் இடையேயான அசைக்க முடியாத சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இன்னும் நெருக்கமாக செயல்படுவதற்கான உறுதியை நாங்கள் எடுத்தோம். பாகிஸ்தான் துருக்கி நட்பு என்பது காலம் கடந்தும் நீடூழி வாழ்க'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் துருக்கி அதிபர் எர்டோகனின் அலுவலகம் இந்த சந்திப்பு பற்றி அறிக்கை வெளியிட்டது. அதில், ‛‛பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனான சந்திப்பு என்பது இருநாடுகள் இடையேயான உறவை ஆழப்படுத்துவது தொடர்பாக நடந்தது. குறிப்பாக எனர்ஜி, வர்த்தகம், போக்குவரத்து, பாதுகாப்பு துறையை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தை அமைந்தது. துருக்கி மற்றும் பாகிஸ்தான் நலன்களுக்காக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கல்வி, உளவுத்துறை தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஆதரவில் ஒற்றுமையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டுக்கான வார்னிங் மெசேஜாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications