"செல்லாது!" ட்விஸ்ட் கொடுத்த பாகிஸ்தான் சபாநாயகர்! கொந்தளித்த எதிர்க்கட்சிகள்! அவையில் நடந்தது என்ன
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்கும் கடைசிக் கட்ட முயற்சிகள் இம்ரான் கான் எடுத்து வருகிறார்.
பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன.
பாக். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணியில் இருந்தும் கூட பலரும் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளனர். இதனால் பதவியை காப்பாற்றிக் கொள்ள முடியாத சூழலுக்கு இம்ரான் கான் தள்ளப்பட்டுள்ளார்..

பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக் கட்சிகள் எனப் பெரும்பாலானோர் இம்ரான் கானுக்கு எதிராக உள்ளதால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றால் அவர் பதவி இழப்பது கிட்டதட்ட உறுதியாகி இருந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 199 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல இம்ரான் கான் அரசுக்கு ஆதரவாக 140க்கும் குறைவான உறுப்பினர்களே ஆதரவாக இருந்தனர். பாக். நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேறக் குறைந்தது 177 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் அவர் அரசு கவிழ்வது உறுதி என்றே கூறப்பட்டது. அதன் பின்னர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதரரும் தற்போது அங்கு எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ள ஷெபாஸ் ஷெரீபை பிரதமராக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.

செல்லாது
இந்தச் சூழலில் இன்று நாடாளுமன்றம் கூடிய போது பிரதமர் இம்ரான் கான் அவைக்கு வரவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் செல்லாது என்றும் இது பாக். அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கூறி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறாது என்று பொறுப்பு சபாநாயகர் காசிம் கான் அறிவித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலேயே அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகள்
பாகிஸ்தானில் நமம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறாது என்று அறிவித்த பின்னர், பாக். நாடாளுமன்றம் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். பிரதமர் இம்ரான் கான் இன்று பதவி இழப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு இப்போது அங்கு நடந்துள்ளது. அதேநேரம் சபாநாயகரின் இந்த அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றம் செல்ல உள்ளதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளனர்.

குழப்பம்
முன்னதாக, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குப் பின்னால் அந்நிய நாட்டுச் சதி உள்ளதாகவும் அவர் சாடியிருந்தார். அதாவது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்குப் பின்னர், இந்தியாவை ஆதரிக்கும் ஒரு சக்திவாய்ந்த நாடு உள்ளதாக அவர் சாடியுள்ளார். சமீபத்தில் தான் ரஷ்யா சென்று வந்ததாலேயே அந்த சக்திவாய்ந்த நாடு, பாக். மீது கோபமாக உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.












Click it and Unblock the Notifications