"பப்பு.." அமெரிக்க நிகழ்ச்சியில் வந்து விழுந்த வார்த்தை! மேடையிலேயே இருந்த ராகுல் ரியாக்ஷனை பாருங்க
டெக்சாஸ்: ராகுல் காந்தி இப்போது அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதற்கிடையே அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா பேசினார். அப்போது அங்கு ஒரு சுவாரஸிய நிகழ்வு நடந்தது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
ராகுல் காந்தி இப்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். அதன்படி அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உடன் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் ஓவர்சீஸ் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சாம் பிட்ரோடா சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.
பப்பு: இந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா, "பல கோடி ரூபாய் செலவழித்து பாஜக ஒரு விஷயத்தை ஊக்குவிக்கிறது. ஆனால், ராகுல் காந்திக்கு அதற்கு நேர்மாறான ஒரு பார்வை இருக்கிறது. நான் உங்களிடம் ஒன்றை தைரியமாகவே சொல்லலாம். இத்தனை காலம் அவரை பப்பு பப்பு என்றார்கள். ஆனால், அவர் பப்பு இல்லை. அவர் அதிகம் படித்தவர், நன்கு படித்தவர், எந்த விஷயத்திலும் ஆழமாக சிந்திக்கும் ஒரு நபர். அவரைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல.
நான் 1950களில் பள்ளிக்கு சென்றவன். அப்போது காந்திய சிந்தனைகள் தான் படிப்பில் முக்கியத்தும் பெற்று இருந்தது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை வெறும் வார்த்தைகள் இல்லை. அதன் அடிப்படையிலேயே நாங்கள் அப்போது இருந்தோம். நம் மக்களை இனம், மதம், மொழி பாராமல் நாம் மதிக்க வேண்டும் என்பதே அந்த சித்தாந்தம். இப்போது ராகுல் காந்தியும் மீண்டும் அதையே தான் சொல்கிறார். அதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பன்முகத்தன்மையை கொண்டாடுவதே ராகுல் காந்தியின் செயல் திட்டமாகும்.
ஜனநாயகம்: இதை சொல்வது ஈஸியாக இருக்கலாம். ஆனால், செய்வது கடினம். ஆனால், அதை செய்வதில் தான் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். ஜனநாயகம் என்பது அவ்வளவு எளிமையானது அல்ல. ஜனநாயகத்தை நிலைநாட்டவே இங்கு பலரின் உழைப்பு தேவைப்படுகிறது. ஜனநாயகத்தை அபகரிக்க இங்கு பலர் காத்திருக்கிறார்கள். எனவே, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதை நாம் பல நாடுகளில் பார்த்திருக்கிறோம்.
சுதந்திர போராட்டத்தின் போது, காந்தி, நேரு, மௌலானா ஆசாத், சர்தார் படேல், மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் சுதந்திரம் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள். சுதந்திர இந்தியா அனைவருக்குமான வாய்ப்பை தரும் என்பதை புரிந்து வைத்திருந்தனர்.
சொல்வதை செய்யும் ராகுல்: ராகுல் காந்தி கடந்த முறை நியூயார்க்கில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட போது டல்லாஸுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அடுத்த முறை வருவதாக கூறினார். சும்மா பேச்சுக்கு கூறுகிறார் என்றே நினைத்தேன். ஆனால், சொன்னது போலவே தனது வாக்குறுதியைக் நிறைவேற்றி இருக்கிறார். பிஸியாக இருந்த போதிலும் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற இங்கு வந்துள்ளார்" என்றார்.
ராகுல் காந்தி ரியாக்ஷன்: ராகுல் காந்தி குறித்து சாம் பிட்ரோடா இப்படி பேசுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. சாம் பிட்ரோடா பேசுவதை ராகுல் காந்தி கூர்ந்து கவனித்து கேட்டு வந்தார்.
தொடர்ந்து சாம் பிட்ரோடா பேசுகையில், "வெளிநாட்டு காங்கிரஸ் பிரிவு என்பது இந்திய தேசிய காங்கிரஸின் ஒரு பகுதியாகும். இப்போது 32 நாடுகளில் இந்தியன் ஓவர்சீர்ஸ் காங்கிரஸ் இருக்கிறது. எங்கள் கட்சி எதை சொல்கிறது, நாங்கள் எதை நம்புகிறோம் என்பதை மக்களிடம் புரிய வைத்து அவர்களை ஒருங்கிணைப்பதே எங்கள் வேலை. இப்போது 32 நாடுகளில் உறுப்பினர்களை அதிகரிப்பது, கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications