48 மணி நேரத்தில் செய்தியாளர்கள் அடுத்தடுத்து மரணம்! கத்தார் உலக கோப்பையில் என்ன நடக்கிறது? பகீர்
கத்தார்: புட்பால் உலகக் கோப்பை நடைபெற்று வரும் கத்தாரில் அடுத்தடுத்து பத்திரிக்கையாளர்கள் உயிரிழக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த மாதம் தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தொடங்கிய இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இதில் டாப் அணிகளாகக் கருதப்பட்ட நாடுகளும் கூட மோசமான தோல்வி அடைந்தது அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. அர்ஜெண்டினா, குரோஷியா, பிரான்ஸ், மொராக்கோ ஆகிய 4 நாடுகள் இப்போது அரையிறுதியை எட்டியுள்ளன.

உலகக் கோப்பை
உலகக் கோப்பை தொடர் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெறும் அதே சூழலில், மறுபுறம் அங்கு சர்ச்சைகளும் தொடர்ந்தே வருகிறது. தீவிர இஸ்லாமிய நாடான கத்தாரில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக உலகக் கோப்பை தொடங்க சில நாட்கள் இருக்கும் போது, பீர் விற்பனைக்குத் தடை விதித்தது. இது புட்பால் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன் கட்டுமான தொழிலாளர்கள் முறையாக நடத்தாதது, ரசிகர்களுக்கு போதிய தங்குமிடங்களை ஏற்படுத்தாதது என்று தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகள் அங்கு எழுந்தன.

தன்பால் ஈர்ப்பு
குறிப்பாக, கத்தாரில் தன்பால் ஈர்ப்பு காதலுக்கு அனுமதி இல்லை. கத்தாரில் உலகக் கோப்பை நடைபெறும் போது, தன்பால் ஈர்ப்பு தடை தொடர்பாக எதையும் பேசக் கூடாது என்று பிபா கூட அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், பல்வேறு வீரர்களும் வெளிப்படையாகவே தன்பல் ஈர்ப்பு காதலுக்கு வெளிப்படையாகவே ஆதரவாகத் தெரிவித்தனர். இதற்கிடையே உலகக் கோப்பை தொடங்கி சில நாட்கள் ஆன சமயத்தில், தன்பால் ஈர்ப்பு காதலுக்கு ஆதரவாக அமெரிக்கச் செய்தியாளர் கிராண்ட் வால் வானவில் ஆடை அணிந்திருந்தார். இதற்காக அவரை ஸ்டேடியத்தில் அனுமதிக்காமல் நீண்ட நேரம் தடுத்து வைத்தது கத்தார் போலீஸ்!

திடீர் மரணம்
இதற்கிடையே அவர் கடந்த வாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மைதானத்தில் போட்டி ஒன்றை அவர் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கியுள்ளார். அவருக்கு உடனடியாக சிபிஆர் கொடுக்கப்பட்டது. இருப்பினும், அது பலனளிக்காத நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருப்பினும், அவர் உயிரிழந்துவிட்டார். இது குறித்து முழுமையாகத் தகவல்களை கத்தார் வெளியிடவில்லை. இதனால் தனது சகோதரர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்காவில் உள்ள கிராண்ட் வால் சகோதரர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அடுத்த சம்பவம்
இதுவே பெரிய சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், சில நாட்களில் அங்கு மற்றொரு செய்தியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அங்குள்ள அல் காஸ் டிவியில் புகைப்பட செய்தியாளராக பணியாற்றியவர் காலித் அல்-மிஸ்லாம். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மரணத்திற்கான காரணம், எப்படி உயிரிழந்தார் உள்ளிட்ட தகவல்களை கத்தார் அதிகாரிகள் அறிவிக்கவில்லை. உலகக் கோப்பை போட்டிகளைக் கவர் செய்து கொண்டிருந்த போது, காலித் அல்-மிஸ்லாம் திடீரென உயிரிழந்ததாக கல்ஃப் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கத்தார் அரசு மவுனம்
அல் காஸ் டிவியும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.. இருப்பினும், மரணத்திற்கான காரணத்தை அவர்களும் அறிவிக்கவில்லை. அமெரிக்கச் செய்தியாளர் கிராண்ட் வால் உயிரிழந்த 48 மணி நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது கத்தார் உலக கோப்பையில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அடுத்தடுத்து செய்தியாளர்கள் மரணமடைவது சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருந்தாலும் கூட கத்தார் அரசு இது குறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

பகீர் குற்றச்சாட்டு
இருப்பினும், வானவில் உடை அணிந்ததற்காகவே தனது சகோதரர் கிராண்ட் வால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவரது மரணத்தில் கத்தார் அரசுக்கும் கூட தொடர்பு இருக்கலாம் என்று வாலின் சகோதரர் அடித்துக் கூறுகிறார். தொற்று நோயியல் நிபுணரான வாலின் மனைவி, தனது கணவர் இப்படி திடீரென உயிரிழக்கும் அளவுக்கு அவரிடம் நோய்ப் பாதிப்புகள் எதுவும் இருந்ததில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications