"கொரோனாவை விட கொடூரம்.." ஜப்பானில் வேகமாக பரவும் சதை உண்ணும் பாக்டீரியா.. அலறும் உலக நாடுகள்
டோக்கியோ: கொரோனாவில் இருந்து நாம் மீண்டு வரவே சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது தான் உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கும் நிலையில், கொரோனாவை விடப் பல மடங்கு கொடிய சதையை உண்ணும் பாக்டீரியா நோய்ப் பாதிப்பு இப்போது ஜப்பான் நாட்டில் பரவி வருகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் மிக விரைவாக உயிரிழப்பு ஏற்படும் என்பதால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன.
இந்த உலகில் பரவிய கடைசி பெருந்தொற்றாக நிச்சயம் கொரோனா இருக்காது என்பதே வல்லுநர்களின் எச்சரிக்கையாக இருக்கிறது. இதற்கிடையே கொரோனாவை விட எளிதாக உயிரைப் பறிக்கும் நோய் ஜப்பானில் பரவி வருகிறது.

ஜப்பானில் பாதிப்பு: எளிதாக உயிரைப் பறிக்கும் இந்த நோய் சில மாதங்களில் 1,000க்கும் மேற்பட்டோருக்குப் பரவி உள்ளது. இதனால் ஜப்பான் சுகாதார அதிகாரிகள் ஹை அலர்ட் மோடில் உள்ளனர். இந்த நோயை STSS அதாவது ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் என்று அழைக்கிறார்கள். இந்த பாதிப்பு ஏற்படும் நபருக்குக் குறுகிய காலத்தில் மரணம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இதைச் சதை உண்ணும் பாக்டீரியா என்றும் குறிப்பிடுகிறார்கள்.
கடந்த ஜூன் 2ஆம் தேதி வரை ஜப்பானில் 977 பேருக்கு இந்த STSS ஏற்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஒட்டுமொத்தமாக ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாகும்.
பாக்டீரியா தொற்று: இந்த STSS என்பது க்ரூப் A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவால் ஏற்படும் மிக அரிதான அதேநேரம் கடுமையான பாக்டீரியா தொற்று ஆகும். இந்த பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் நுழையும் போது அது உடலில் ஆபத்தான விஷயத்தை உடலில் பரப்பும். உரிய நேரத்தில் சரியான சிகிச்சை இல்லை என்றால் உயிரிழப்பே கூட ஏற்படும். அதேநேரம் இந்த பாதிப்பு கொண்ட ஒருவரிடம் இருந்து நேரடியாக மற்றொருவருக்கு இது பரவும் வாய்ப்புகள் குறைவு என்பது சற்றே ஆறுதல் தரும் விஷயம்.
அறிகுறிகள்: காய்ச்சல், தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இதன் முதற்கட்ட அறிகுறிகளாகும். இந்த பாதிப்பு ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் குறைந்த ரத்த அழுத்தம், உறுப்பு செயலிழப்பு, இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும்.
மேலும், நோய்ப் பாதிப்பு அதிகரிக்கும் போது மூட்டு வலி, வீக்கம், திசு இறப்பு, சுவாசப் பிரச்சனைகள், உறுப்பு செயலிழப்பு ஆகியவை ஏற்படும். இந்த பாதிப்பிற்கு உரியச் சிகிச்சை இல்லை என்றால் உயிரிழப்பே கூட நிகழும். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டோர் இந்த பாதிப்பு ஏற்பட்டால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோய்ப் பாதிப்பு ஏற்பட்ட உடன் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தடுக்க என்ன செய்யணும்: இந்த STSS பாதிப்பைத் தடுக்க சுத்தமாக இருந்தாலே போதும். அவ்வப்போது கைகளை சோப் கொண்டு கழுவுங்கள்.. காயங்கள் இருந்தால் அதில் தொற்று பாதிப்பு ஏற்படுகிறதா என்பதைக் கவனியுங்கள். தொற்று பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள். இதுபோல அடிப்படை சுகாதாரத்தைக் கடைப்பிடித்தாலே போதும் இந்த நோய்ப் பாதிப்பு நம்மைத் தாக்காது.
க்ரூப் A ஸ்ட்ரெப் பாக்டீரியாவைக் கண்டறிய ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்குக் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனைகள் போன்ற பிரச்சினைகள், அதாவது ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு உறுப்புகள் செயலிழந்தால் இந்த பாதிப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம்.
சிகிச்சை என்ன: இந்த STSS பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகள் வழங்கப்படும். இவை பாக்டீரியாக்களை கொல்ல உதவும். மேலும், ரத்த அழுத்தத்தைச் சீராக்கவும் உடல் உறுப்புகள் சரியாக வேலை செய்யவும் தொடர்ந்து திரவ அடிப்படையில் உணவுகள் வழங்கப்படும். குறிப்பிட்ட இடத்தில் பாக்டீரியா பாதிப்பு இருந்தால்.. அது மற்ற இடங்களுக்குப் பரவாமல் இருக்க அறுவை சிகிச்சை மூலம் அந்த பகுதியை அகற்றப்பட வேண்டும். இந்த நோய்ப் பாதிப்பு ஏற்படும் போது விரைவாகச் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.












Click it and Unblock the Notifications