உருக்குலைந்த துருக்கி.. துயர் துடைக்க களமிறங்கிய 45 நாடுகள்! உயிரிழப்பு குறித்து WHO அதிர்ச்சி தகவல்
உலகின் தீவிரமான நிலநடுக்க மண்டலத்தில் துருக்கியும் ஒன்றாகும். இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது சகஜமானதுதான் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஆனால் நேற்று ஏற்பட்டது பேரழிவு என தெரிவித்துள்ளனர்.
அங்கரா: துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் சிக்கி இதுரை 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்கும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
துருக்கியில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காஸியான்டெப் நகருக்கு அருகே 17.9 கிமீ ஆழத்தில் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சிரியா எல்லையையொட்டியுள்ள கஹ்ரமன்மரஸ் மற்றும் காஸியான்டெப் நகரங்களுக்கு இடையே உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த இரு நகரங்களுக்கும் இடையே சுமார் 81 கி.மீ தொலைவு இருக்கிறது. நிலநடுக்கத்தால் இந்த 81 கி.மீ பகுதிக்குள் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. பாதி கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனையடுத்து மீட்பு பணிகளில் ராணுவத்தினரும், விமானப்படையினரும் களமிறக்கப்படடுள்ளனர். முதலில் சுமார் 100 பேர் சடலங்களாக மீட்கப்ட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்பட்டது.

உதவி
பனியும், மழையும் சேர்ந்து பெய்து வருவதால் முக்கிய நகரங்களுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இங்கிருந்து மீட்பு பணிகளுக்கு வர இருந்த பேரிடர் மீட்பு படைகளின் வருகை தாமதமானது. இதனையடுத்து மீட்பு பணிகளுக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட் நாடுகள் முன்வந்தன. இந்தியா சார்பில் 100 பேரை கொண்ட இரண்டு பேரிடர் மீட்பு குழுக்கள் துருக்கி பறந்துள்ளன. அதேபோல அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்களது பேரிடர் மீட்பு படையை துருக்கிக்கு அனுப்பி வைத்தது. வானிலை ஒரளவு சீரான நிலையில் மீண்டும் மீட்பு பணிகள் சூடுபிடித்தன.

மீட்பு
இதில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு சடலத்தை மீட்பு படையின் கண்டெடுத்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில் முதல் நிலநடுக்கம் பதிவாகி 12 மணி நேரம் இருக்கையில், மாலை 4 மணியளவில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கம் மீதமிருந்த கட்டிடங்களையும் சரித்தது. இதனால் மீண்டும் மீட்பு பணிகள் முதலிலிருந்து தொடங்கின. உலகின் தீவிரமான நிலநடுக்க மண்டலத்தில் துருக்கியும் ஒன்றாகும். இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது சகஜமானதுதான் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

உயிரிழப்பு
இதேபோல கடந்த 1999ம் ஆண்டு நாட்டின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 17 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதற்கும் முன்னர் 1939ம் ஆண்டு துருக்கியின் கிழக்கு எர்சின்கான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 33 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த இரண்டு நிலநடுக்கத்தை விட தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம் சக்தி வாய்ந்தது என ஆய்வாளர்களும் உள்ளூர் மக்களும் கூறுகின்னர். நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 2 நிமிடங்கள் வரை நீடித்ததாக கூறுகின்றனர். இது குறித்து கஹ்ரமன்மரஸ் நகரவாசி ஒருவர் கூறுகையில், "நிலநடுக்கம் எங்களுக்கு இயல்பானதுதான். இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்தது கிடையாது. ஆனால் இந்த முறை ஏற்பட்டது ஒரு பேரழிவு" என்று கூறியுள்ளார்.

ரத்த தானம்
மீட்பு பணிகளை பொறுத்த அளவில் இந்தியா, அமெரிக்கா என மொத்தம் 45 நாடுகளை சேர்ந்த வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். துருக்கி செஞ்சிலுவைச் சங்கம், உயிர் பிழைக்க போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு உயிர் பிழைத்திருக்கும் மக்கள் ரத்த தானம் செய்து உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், எனவே உயிரிழப்பு எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பின் மூத்த அவசரநிலை அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் கூறியுள்ளார்.

துக்கம்
துருக்கி மட்டுமல்லாது சிரியாவும் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. வடமேற்கு சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அகதிகளின் குடியிருப்புகள் முற்றிலுமாக இடிந்து விழுந்திருக்கிறது. ஏற்கெனவே நாட்டையும், வீட்டையும் விட்டு வெளியேறிய அகதிகள் தற்போது தங்களுடன் மீதமிருந்த குழந்தைகளயும், உறவினர்களையும் இழந்து வேதனையடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தையடுத்து அடுத்த 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி அரசு அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications