"என்ன ஆனாலும் ரஷ்யாவை விட மாட்டோம்.. நாங்க எப்போதும் அவங்க பக்கம் தான்.." உறுதியாகச் சொல்லும் சிரியா
கீவ்: உக்ரைன் போரில் ரஷ்யப் படைகள் திணறி வருவதாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில், திடீர் திருப்பமாக சிரியா வீரர்கள் ரஷ்யப் படைக்கு ஆதரவாகப் போரிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர், 4ஆவது வாரமாக இப்போதும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நகரின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
போர் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை பல கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள போதிலும் அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதன் காரணமாகவே போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

உக்ரைன் போர்
சொல்லப்போனால் உக்ரைன் போர் இவ்வளவு நாட்கள் நீட்டிக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. போர் சில நாட்களில் முடிந்துவிடும் என்றே பலரும் கருதினர். இருப்பினும், ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடி வருகின்றனர். உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் ரஷ்யா ராணுவம் முன்னேற முடியாமல் ஸ்தம்பித்துள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் பெரும்பாலான உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ள நிலையில், சீனா உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

சிரிய வீரர்கள்
குறிப்பாக, சிரியா இந்தப் போரைத் தொடக்கம் முதலே ஆதரித்தே வருகிறது. வரலாற்றில் ஏற்பட்ட பிழையைச் சரி செய்யும் நிகழ்வு என்றே இந்தப் போரை சிரியா அதிபர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சில சிரிய துணை ராணுவ வீரர்கள் ரஷ்யாவிற்கு ஆதரவாகப் போரிட உக்ரைனுக்குச் செல்லத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர். சிரியா நகர்ப்பகுதிகளில் போரிட்டு அனுபவம் கொண்டவர்கள் என்பதால், உக்ரைன் போரில் அவர்கள் ரஷ்யாவுக்குப் பெரியளவில் உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக சிரிய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவுறுத்தலும் வரவில்லை என்று சிரிய தளபதி தெரிவித்துள்ளார்.

ஏன் முக்கியம்
இது தொடர்பாக சிரியா நாட்டின் துணை ராணுவ தேசியப் பாதுகாப்புப் படைகளின் தளபதி நபில் அப்துல்லா கூறுகையில், "சிரியப் போரின் போது பெற்ற நகர்ப்புறப் போரில் எங்கள் கிடைத்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்கு உதவத் தயாராக உள்ளோம். சிரிய மற்றும் ரஷ்யத் தலைமையிடமிருந்து உத்தரவு கிடைத்த உடன் உக்ரைனை எதிர்த்துப் போராடுவோம். நாங்கள் இதைக் கண்டு அஞ்சவில்லை. போருக்குத் தயாராகவே இருக்கிறோம். எங்களால் உக்ரைன் நகரங்களை எளிதாக வீழ்த்த முடியும். சிரியாவில் பயங்கரவாதிகளை வீழ்த்திய அனுபவம் இதில் எங்களுக்கு கை கொடுக்கும்" என்றார்.

என்ன முடிவு
இருப்பினும், சிரிய ராணுவத்தை இந்தப் போரில் பயன்படுத்தப் போகிறதா இல்லையா என்பதை ரஷ்யா இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்ட போதும், ரஷ்ய அதிபர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு சிரியாவில் போர் நடந்த போது, அந்நாட்டு அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ரஷ்யா தான் தக்க நேரத்தில் சிரியாவுக்கு உதவியது.

உலக நாடுகள்
கடந்த 2015ஆம் ஆண்டு, இக்கட்டான சூழல் நிலவிய போது, ரஷ்யா செய்த உதவி காரணமாகவே பஷர் அல்-அசாத் ஆட்சி தப்பியது. இதன் காரணமாகவே உக்ரைன் போரில் உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இருப்பினும், அப்போதும் கூட முதல் ஆளாக ரஷ்யா அதிபர் புதினுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர் பஷர் அல்-அசாத் கொடுத்து இருந்தார்.












Click it and Unblock the Notifications