அத்தி வரதரை தரிசிப்பதற்கான நேரம் நீட்டிப்பு... மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்த தரிசன நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக தொடங்கியது. 40 ஆண்டுகளுக்கு பின், இந்த வைபவம் நடைபெறுவதால், அத்தி வரதரை தரிசிக்க, உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அன்று, ஒரே நாளில் 1 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதுவரை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
நேற்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் தரிசனம் செய்தார்கள். இன்று காலை அத்திவரதரை சவுமியா அன்புமணி வழிபட்டார்.
விழாவின் 9-ம் நாளான இன்று அத்திவரதர் மாம்பழ வண்ண பட்டாடை மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காஞ்சிபுரத்திற்கு வரும் அனைத்து வழிகளிலும் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் குவிந்து வருகின்றனர். சுமார் 1,500 போலீசார், சுழற்சி அடிப்படையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் மயங்கி விழுவோருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்தி வரதர் வைபவம் துவங்கிய நாள் முதல், தரிசனம் தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. முதல் நாளே, 50 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், அத்திவரதரை தரிசிக்க காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்த தரிசன நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications