காந்திய சுட்ட பெண் சாமியார் பூனம்.. உருவபொம்மையை எரித்தும், காலில் போட்டு மிதித்தும் போராட்டம்
Recommended Video
கன்னியாகுமரி: மகாத்மா காந்தியடிகளின் உருவப் பொம்மையை துப்பாக்கியால் சுட்டு அவமதித்த பூஜா சகுன் பாண்டேயை கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தியை அவமதிக்கும் விதமாக அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் அவரது உருவ பொம்மையை அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி பூஜாசகுன் பாண்டே மற்றும் சிலர் துப்பாக்கியால் சுட்டு கிண்டல் செய்து அவமானப்படுத்தினர்.
இந்த சம்பவத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எந்த எதிர்ப்பும் காட்டாமல் வேடிக்கை பார்க்கும் உத்தரப்பிரதேச அரசை கண்டித்தும், துப்பாக்கியால் சுட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் இராஜஜெகன் தலைமையில் பூஜா சகுன் பாண்டேவின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடைபெற்றது.
அப்போது, ஏராளமான கட்சி தொண்டர்கள் உத்தரபிரதேச அரசைக் கண்டித்தும், காந்தியடிகளின் உருவ பொம்மையை அவமதித்தவர்களை கண்டித்தும் கோஷமிட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தின் நிறைவில் பூஜாசகுன்பாண்டேவின் உருவப் படத்தை தீயிட்டு கொளுத்தியும் காலால் மிதித்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினர் . இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.