கன்னியாகுமரி திமுக வேட்பாளரின் தலையெழுத்தையே மாற்றிய தபால் ஓட்டு.. என்ன நடந்தது?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் என் வெற்றியை தேர்தல் அதிகாரிகள் பறித்துள்ளனர். 823 தபால் வாக்குகளை திட்டமிட்டு தில்லுமுல்லு செய்து நிராகரித்துள்ளனர். தபால் வாக்குகளை மீண்டும் எண்ணினால் நான் வெற்றி பெற்றதாக வரும் என திமுக வேட்பாளர் மகேஷ் கூறியுள்ளார்
திமுக நிர்வாகி ஒருவர் கூறும் போது, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மகேஷ் போட்டியிட்டார். தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் எங்களுக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் முடிந்து இன்று வாக்கு பதிவு எண்ணப்பட்டது. 26 சுற்று வாக்குகள் எண்ணும் பணி நடந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 772 வாக்குகள் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஏழு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணாமல் இருந்தது. அவற்றில் ஒரு சில பழுது ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் வாக்கு பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு அவற்றை எண்ணிய நிலையில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தேர்தலில் 214 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறினர்.
தகவல் அறிந்ததும் எங்கள் வேட்பாளர் மகேஷ் மற்றும் தேர்தல் ஏஜெண்டுகள் தேர்தல் அதிகாரியிடம், வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடி நடந்துள்ளது. தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை. வாக்குப்பதிவை மீண்டும் எண்ண வேண்டும் என மனு கொடுத்தார்கள். தேர்தல் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இது குறித்து கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் என்னை விட 214 வாக்குகள் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் அதிகம் பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்கள். மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தோம் அதனை ஏற்க மறுத்துவிட்டார்கள். 823 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. , அதிகாரிகளின் தவறால் ஏற்பட்ட தவறுகளை காரணம் காட்டி நிராகரித்துள்ளார்கள். திமுக தலைமையின் ஆலோசனை பெற்று சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திற்கு புறம்பாக அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தபால் வாக்குகளை மீண்டும் எண்ணினால் நான் வெற்றி பெற்றதாக வரும்" இவ்வாறு கூறினார்.
என்ன நடந்தது
இதனிடையே கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய்சுந்தரம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் நிராகரிக்கப்பட்டு இருந்த 828 தபால் ஓட்டுகளை எண்ண வேண்டுமென்று தி.மு.க. வேட்பாளர் மகேஷ் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட தபால் ஓட்டுகள் எண்ணும் பணி மீண்டும் நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பணியின் இறுதியில் 214 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய்சுந்தரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:-
தளவாய்சுந்தரம் (அ.தி.மு.க.) - 74,904
மகேஷ் (தி.மு.க.) - 74,764
மாதவன் (த.வெ.க.) - 72,860
மரியஜெனிபர் (நா.த.க.) - 13,668
மணவை கண்ணன் - 140
சிவலிங்கம் - 194
ரீஜன் ஆன்ட்ரோ - 301
ஸ்ரீகிருஷ்ணகுமார் - 206














Click it and Unblock the Notifications