Annamalai: கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு.. பாஜக அண்ணாமலை அளித்த பகீர் புகார்
கரூர்: கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளன. பணத்தை வைத்து கோயம்புத்தூர் மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைப்பவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் அண்ணாமலை.

வாக்களித்த பின் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, "மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும். காரணம், இந்த ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர் பெருமக்கள் மட்டும்தான். வாக்காளர் பெருமக்கள்தான் இந்த நாடு எப்படி செல்ல வேண்டும்? நல்லவர்கள் நம்மை ஆள வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள்.
ஆள்பவருக்கும் நமக்கும் எப்போதும் தொப்புள்கொடி உறவு இருக்க வேண்டும். சிந்தித்து எல்லோரும் வாக்களிப்போம். நான் எனது ஜனநாயக கடைமையை ஆற்றிவிட்டேன். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் எங்கிருந்தாலும் இன்று மாலைக்குள் வாக்காளியுங்கள். நல்ல ஒரு ஆட்சி அமைய உதவுங்கள். நல்லவர்களுக்கு வாக்களியுங்கள். பெரிய மாற்றத்தை கொண்டு வாருங்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அண்ணாமலை, "தேர்தலை நேர்மையாக சந்தித்து வருகிறோம். கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். ஒரு அறம் சார்ந்த வேள்வியாக இந்த தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது.
கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளன. பணத்தை வைத்து கோயம்புத்தூர் மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைப்பவர்களுக்கு கோவை மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக, தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசியுள்ள அண்ணாமலை, "10 ஆண்டுகால பாஜக ஆட்சியை மக்கள் பார்த்துள்ளனர். இந்த ஆட்சி இன்னும் 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். பாஜக இந்த முறை தமிழ்நாட்டில் தனித்து 25 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும். டபுள் டிஜிட்டில் சீட்களை கைப்பற்றும்" எனத் தெரிவித்துள்ளார்.
கோவை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கோவையில் கடும் போட்டி நிலவி வருவதாகச் சொல்லப்படும் நிலையில் அண்ணாமலை, திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications