சீரியல் நடிகை ராணி.. பிஎம்டபிள்யூ கார், 10 லட்சம், தங்கம்.. கரூர் ஹோட்டல் உரிமையாளரால் வந்த சிக்கல்
கரூர்: கரூரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரிடம் 10 லட்சம் ரூபாய் பணம், பிஎம்டபிள்யூ கார், ஐந்து சவரன் நகை ஆகியவற்றை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சீரியல் நடிகை ராணி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். என்ன நடந்தது? கணவருடன் நடிகை ராணி வழக்கில் சிக்கியது ஏன், போலீசார் போட்டுள்ள வழக்குகளின் விவரங்களை பார்ப்போம்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் ராஜ். இவர் கரூர் மாநகரில் கோவை சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக பணத்தேவை இருந்ததால் சென்னை, வளசரவாக்கத்தை சேர்ந்த பாலாஜி என்ற பாலமுருகனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

பாலாஜி தனக்கு கரூரில் நண்பர்கள் இருப்பதாக கூறி வடிவேலு என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். வடிவேலு தனது நண்பர் ஆறுமுகம் ஹோட்டலை நடத்துவதாக கூறி, அனைவரும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து 10 லட்சம் ரூபாய் தொகையை பாலாஜியிடம் பணத்தை ஓட்டலிலேயே கொடுத்தார்களாம். அப்போது தினேஷ்ராஜ் தன்னுடைய பொருளாதார பிரச்சினையை கூறியபோது, இரண்டு நாட்களில் சென்னை சென்று பிரச்சனையை தீர்ப்பதாக கூறி தினேஷ்ராஜ்-க்கு சொந்தமான ரூபாய் 80 லட்சம் மதிப்புள்ள BMW கார் மற்றும் அவரது மகளின் ஐந்து சவரன் தங்கத்தோடு என இரண்டையும் தன்னுடைய மனைவி ராணியிடம் (சீரியல் நடிகை) காட்டிவிட்டு திருப்பி தங்களிடமே தருவதாக பாலாஜி வாக்குறுதி அளித்துள்ளாராம்.
அப்போது அவருடன் இருந்த புருஷோத்தமன் என்பவர் அளித்த நம்பிக்கையின் காரணமாக அவரிடம் பணம், கார் மற்றும் நகையை ஒப்படைத்துள்ளாராம். ஆனால், பாலாஜி கார் நகை, பணம் என எதையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் அவரிடம் இருந்து தனக்கு சரியான பதில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இறுதியாக பாலாஜியிடம் கரூர் ஆறுமுகத்தின் முன்னிலையில் கேட்டபோது, அவர் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை வைத்து தாக்கியதாக ஹோட்டல் உரிமையாளர் தினேஷ்ராஜ் குற்றம்சாட்டுகிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் தினேஷ் ராஜ் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ,
அந்த புகாரில் பாலாஜியை அழைத்து விசாரணை செய்து தன்னுடைய கார் மற்றும் ஐந்து சவரன் தங்கத்தோடு மற்றும் ரூபாய் 10 லட்சத்தை பெற்றுத் தருமாறும், தன்னை நம்ப வைத்து மோசடி செய்த பாலாஜி என்ற பாலமுருகன், அவரது மனைவி ராணி அவரது நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினேஷ் ராஜ் கூறியுள்ளார்.
தினேஷ் ராஜ் அளித்த புகாரின் பேரில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பாலாஜி என்ற பாலமுருகன், அவரது மனைவி சீரியல் நடிகை ராணி, பாலாஜியின் நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் மீது BNS 296(b), 115(2), 316(5), 318(4), 351(3) உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி நடிகை ராணி விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications