கரூர் துயரம்.. தொடரும் உயிரிழப்புகள்! அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூரில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அவரை காண அதிக அளவில் மக்கள் கூடியதால், நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாவட்ட வாரியாக பிரச்சாரப் பயணத்தை விஜய் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்திருந்தார். ஆனால் அனுமதி பெறப்பட்ட நேரத்தை விட 4 முதல் 6 மணி நேரம் வரை தாமதமாக பிரச்சார இடத்திற்கு வந்த விஜய், பிரச்சாரத்தை மிகவும் தாமதமாக துவங்கியிருந்தார். ஏற்கெனவே அவரை காண்பதற்காக 6 மணி நேரம் வரை காத்திருந்த ரசிகர்கள், விஜய் வந்த பின்னர் அவரைக் காண முந்தி அடித்தபோது நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இதில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சோகம் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தொடங்கி முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வரை இந்த துயரத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் விஜய் திருச்சியில் இருந்து சென்னை சென்றடைந்திருக்கிறார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு விஜய் பதிலளிக்காமல் சென்றிருந்தார். சென்னை சென்றடைந்த பின்னர், உயிரிழப்பு குறித்து இரங்கல் பதிவிட்டிருக்கிறார்.
மறுபுறம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நள்ளிரவு புறப்பட்டு, தனி விமானம் மூலம் இன்றும் ஓரிரு மணி நேரங்களில் திருச்சி வந்தடைகிறார். அங்கிருந்து கரூர் வந்து சேருகிறார். இந்நிலையில் அவசர உதவி மையங்களுக்கான எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உயிரிழந்தவர்களின் விவரம், காணாமல் போனவர்கள் குறித்த சந்தேகம் இருப்பின் இந்த எண்கள் மூலம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 04324 - 256306, 7010806322 இந்த எண்களை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications