செந்தில்பாலாஜி கைதால் உச்சகட்ட பதற்றத்தில் கரூர்.. குவிக்கப்பட்ட போலீசார்! கண்காணிப்பு வளையம்: பரபர!
கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதைத் தொடர்ந்து திமுகவினரிடையே பதற்றம் நிலவி வருவதால் கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலக அலுவலகத்தில் நடத்தப்பட்ட நீண்ட சோதனைகளுக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கதறி அழுத அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ரத்தநாள பரிசோதனை இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் மூன்று முக்கியமான குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவர் குழு பரிந்துரைத்தது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் ஒப்புதல் பெறப்பட்டு, பைபாஸ் அறுவை சிகிச்சை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிகழ்வு கரூர் மாவட்ட தி.மு.கவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கரூர் பேருந்து நிலையம், மாவட்ட பா.ஜ.க அலுவலகம், மனோகரா கார்னர், திருக்காம்புலியூர் ரவுண்டானா, சர்ச் கார்னர், வெங்கமேடு, லைட் ஹவுஸ் கார்னர் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர் தலைமையில், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் தங்களது ரோந்து வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்கள், கரூர், கோவை மாட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications