அதை பற்றி பேசுவதே கேவலம்.. எனக்கு மனைவி, பிள்ளைகள் இருக்கு.. விஜயலட்சுமி புகாருக்கு சீமான் பதில்!
கரூர்: நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியை முதலில் தவிர்க்க முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளித்த நடிகை விஜயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மீண்டும் புகார் அளித்தார். சீமானை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, சீமானை நம்பி தற்போது இந்த இடத்தில் நிற்கிறேன். அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும். என்னுடைய புகாரின் மீது தற்போதுள்ள தி.மு.க அரசும், முதல்வர் ஸ்டாலினும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்துதான், என்னுடைய வாழ்வும் சாவும் அடங்கியிருக்கிறது எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "சீமான் என்னை திருமணம் செய்துகொள்வதாக அப்போது கூறியதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தை பேசாமல் நிறுத்தி வைத்திருந்தோம். ஆனால், அவர் என்னை திருமணம் செய்யவில்லை. இப்போது வரை கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்." எனக் கண்ணீருடன் கூறினார் விஜயலட்சுமி
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜயலட்சுமியின் புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், "நடிகை விஜயலட்சுமியின் புகாரில் உண்மை இருந்தால் போலீஸ் விசாரணைக்கு எடுத்திருப்பார்கள். அதைப் பற்றி பேசுவது கேவலம் என நினைக்கிறேன்.
அமைதியாக கடந்து போக வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை நம்பி பல கோடிக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. எனக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசுவது கேவலமாக உள்ளது. அவர் குற்றம் சாட்டுவதற்கு அரசியல் கூட காரணமாக இருக்கலாம்." என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்துப் பேசிய சீமான், "ஆளுநர் ராஜ்பவனில் இருக்க வேண்டிய ஆளே இல்லை, மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்" என்று கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications