விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு! தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் கே.பி.முனுசாமி!
கிருஷ்ணகிரி: தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடக் கோரி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பு கே.பி.முனுசாமி திடீர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவினரும், விவசாயிகளும் கே.பி.முனுசாமியை சந்தித்து அவர்கள் தங்களின் ஆதரவை நல்கி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் விளை நிலங்களை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை கைவிடக்கோரி சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பாக முன்னறிவிப்பின்றி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார் கே.பி.முனுசாமி.
5,000 குடும்பங்கள்
5,000 விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாய நிலத்தை தொழிற்சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் பறிக்காதே பறிக்காதே என்ற கோரிக்கை முழக்கத்துடன் அவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கட்சியினர், விவசாயிகள் என பெருமளவில் திரண்டு கே.பி.முனுசாமியின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதால அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் பேச்சு
இதனிடையே சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமியிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதனை அவர் ஏற்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விளை நிலங்கள் கையகப்படுத்துதல் தொடர்பாக ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியதும் அதற்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 6-ம் தேதி
மீண்டும் ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. அப்போது இந்தப் பிரச்சனையை பேரவையில் எழுப்புவார் எனத் தெரிகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.