தமிழ்நாட்டில் பாஜக தனி முத்திரை பதிக்கிறது.. தொண்டர்களை யாராலும் தொட முடியாது.. அண்ணாமலை!
பாஜக தொண்டர்களை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது என அண்ணாமலை பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரி: பாஜக தொண்டர்களை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை அடிமட்டதில் இருந்து பலப்படுத்திட வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பாஜகவின் மாவட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் 9 மாவட்ட பாஜக அலுவலகங்கள் காணொலி காட்சி மூலமாக திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டார்.
அதேபோல் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தை ஜேபி நட்டா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அண்ணாமலை பேச்சு
இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத ஒரு சரித்திரம் நமது கண் முன் நடக்கிறது. ஒரே நேரத்தில் 10 இடங்களில் பாஜக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன் ஜேபி நட்டா தலைவராக பொருப்பேற்ற போது தமிழ்நாடு வந்தார். அப்போது மாநில தலைவராக இருந்த எல்.முருகன், அவரை அழைத்து சென்று திருவள்ளூர் கட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். அந்த மாவட்ட அலுவலகத்துடன் சேர்த்து இன்று 10 மாவட்ட அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக முத்திரை
திரிபுரா, நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. நம்மை பொறுத்தவரையில் கட்சி அலுவலகம் என்பது கோயில். இந்தக் கட்சி தியாகத்தால் வளர்க்கப்பட்ட கட்சி. எத்தனையோ பேர் கட்சி துண்டு அணிந்து உயிர் விட்டுள்ளார்கள். இன்று கட்சி அலுவலகங்கள் திறப்பதற்கு காரணமாக இருந்த பாஜகவின் மாநில முன்னாள் தலைவர்கள் எல்.முருகன் மற்றும் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோருக்கு என் நன்றி. தமிழ்நாட்டில் பாஜக தனி முத்திரை பதித்து வருகிறது. எதிர்த்து குரல் கொடுக்கிரோம். ஒரு தொண்டன் எதிர்த்து கேட்கிறான். சிறை செல்கிறான். மீண்டும் வெளியே வந்து எதிர்த்து கேட்கிறான்.

பாஜகவை தொட முடியாது
மக்கள் பிரச்சினைகளை தட்டி கேட்போம். அதற்காக அந்த பிரச்சினைகள் வந்தாலும் தயங்க மாட்டோம். இது தொண்டர்களுக்கான கட்சி. இதனை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது. திமுக ஆட்சி அமைந்து 24 மாதங்கள் ஆகிறது. அதனை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இன்னும் 12 மாதங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வர உள்ளது. விவசாயிகளுக்கு, மகளிருக்கு, இளைஞர்களுக்கு என எண்ணற்ற திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்
2024ம் ஆண்டு தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்காக பாஜக தொண்டர்கள் அனைவரும் வேகமாக பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் அடிமட்டத்தில் இருந்து நாம் கட்சியை பலப்படுத்திட வேண்டும். நமது கூட்டணி கட்சி எம்பி-க்கள் நாடாளுமன்றத்தில் பணியாற்ற வேண்டும். நமது கூட்டணி எம்பி-க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து உங்களான அரசாக பாஜக உள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications