ஸ்டாலின் ஆர்டர் போட்டதுமே கிருஷ்ணகிரிக்கு விரைந்த சிறப்பு புலனாய்வுக் குழு.. தீவிரமடைந்தது விசாரணை!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில்,சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி, ஐ.ஜி பவானீஸ்வரி மற்றும் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழுவினர் நேற்று இரவே கிருஷ்ணகிரிக்கு விரைந்தனர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி, விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன், 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன். இந்த போலி என்.சி.சி. முகாம் நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொறுப்பாளர் சிவராமன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மாணவிக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரம் பற்றி தெரிந்தும் அதை மறைக்க முயற்சி செய்த பள்ளியின் முதல்வர், தாளாளர் உட்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து முடிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரும் வகையில், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும், பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்கள் பெற்றோரை கலந்து ஆலோசித்து அவர்களின் நலம் காத்திட சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி இந்த 2 குழுவினர் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, சமூக பாதுகாப்பு ஆணையர், கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், மருத்துவ குழுவினர், மனநல ஆலோசனைக் குழுவினர், காவல்துறை உயரதிகாரிகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த இடங்களை ஆய்வு செய்ய உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதைத் தொடர்ந்து, 2 நாட்கள் அங்கே தங்கி இருந்து நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்திய பிறகு இந்த குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், இனி இதுபோன்ற நிகழ்வு நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications