பிரிட்டன் உளவாளிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்.. வூஹான் ஆய்வு மையத்திலிருந்து கொரோனா.. விசாரணை தீவிரம்
லண்டன்: வூஹான் ஆய்வு மையத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்புள்ளதாகப் பிரிட்டன் உளவுத் துறை, நம்புவதாகவும் இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய, கொரோனாவை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்த வைரஸ் குறித்த பல விஷயங்கள் நமக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வைரஸ் பரவலுக்கு நாம் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டாலும்கூட இன்னும் வைரசின் தன்மை குறித்து முழுமையாக நமக்குத் தெரியவில்லை. எனவே, கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வுகள் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது

கொரோனா வைரஸ்
வூஹான் நகரில் அமைந்துள்ள வைரலாஜி மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் முதலில் கூறப்பட்டது. ஆனால் இந்த கருத்து தொடக்கத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தாலும், பின்னர் கிட்டதட்ட அனைவராலும் நிராகரிக்கப்பட்டதாக மாறிவிட்டது. உலக சுகாதார மையத்தின் ஆய்வாளர்களும்கூட கொரோனா ஆய்வு மையத்திலிருந்து பரவியிருக்க வாய்ப்பு குறைவு என்றே தெரிவித்தனர்.

அமெரிக்கா தகவல்
இந்தச் சூழ்நிலையில், கடந்த வாரம் வெளியான அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் அறிக்கை மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதமே கொரோனா ஒத்த அறிகுறிகளுடன் வூஹான் ஆய்வு மையத்திலிருந்து பல ஆராய்ச்சியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், சீனா முதலில் 2019 டிசம்பர் 31ஆம் தேதி தான் கொரோனா பற்றி உலக சுகாதார அமைப்புக்குத் தெரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் உளவாளிகள்
இந்நிலையில் வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியதாக இருக்கும் கருத்தை வலுப்படுத்தும் வகையில் தற்போது பிரிட்டன் நாட்டிலுள்ள சண்டே டைமஸ் புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகப் பிரிட்டன் உளவுத் துறை நம்புவதாகவும் இது குறித்து பிரிட்டன் உளவாளிகள் தேவையான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நம்பகமான தகவல்
இந்த விஷயம் குறித்து நன்கு அறிவித்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா தோற்றம் குறித்து பிரிட்டன் உளவுத் துறைக்குக் கிடைத்த ஒரு நம்பகமான தகவல் காரணமாகவே வூஹான் வைரலாஜி மைய கோட்பாட்டை விசாரிக்கப் பிரிட்டன் உளவுத்துறை முடிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்படவுள்ளது.

சீனா மறுப்பு
முன்னதாக, கொரோனா தோற்றம் குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொண்டு 90 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், வூஹான் வைராலஜி மையத்திலிருந்து கொரோனா தேன்றியிக்கலாம் என்ற தகவல்களைச் சீனா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications