அமெரிக்கா வச்ச ஆப்பு.. இப்போ இவங்க? இந்தியர்கள் கழுத்தை நெரிக்கும் இங்கிலாந்து! தீவிரமாகும் கெடுபிடி
லண்டன்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து இந்தியர்களுக்கு எதிரான விசா விதிமுறைகளை கடுமையாக்கி வரும் நிலையில், ஆஸ்திரேலிய இங்கிலாந்தில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்த நிலையில் இந்தியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக இங்கிலாந்து செல்லும் விசாவுக்கான ஆங்கிலத் தேர்வுகளை கடுமையாக்க பிரிட்டன் நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது அதிகரித்துள்ளதாகக் கூறி, இங்கிலாந்து நாட்டினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநாட்டினர் வேலைவாய்ப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை சேவைகளைப் பயன்படுத்துவதால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.

இதனால் வேலைவாய்ப்பு குறைவு, வீட்டு வாடகை உயர்வு, பொருளாதாரச் சுமை போன்ற பிரச்சனைகள் உருவாகியுள்ளன. பொதுமக்கள் இதற்கு எதிராக சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்துவதும் நடக்கிறது. சமீபத்தில் லண்டனில் நடந்த பரபரப்பான போராட்டம் உலக அளவில் பேசுபொருளானது.
சட்டவிரோத குடியேற்றம்
உள்ளூர் மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுகிறார்கள் என்றாலும், இது இனவெறிப் போராட்டம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள் ஆகியோர் இந்த போராட்டத்தில் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டனில் தற்போது சுமார் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் கல்வி, வேலை மற்றும் வணிகம் காரணமாக சட்டபூர்வமாக தங்கியுள்ளனர். ஆனாலும் சிலர் சுற்றுலா விசா, ஸ்டூடென்ட் விசாவை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடியேற்ற கொள்கை
இதனால், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டு வாடகை, அன்றாட வாழ்வில் சிரமங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், உலகளாவிய தொழில்நுட்ப, தகவல் தொழில், கல்வி, வணிகம் போன்ற துறைகளில் இந்தியர்கள் சிறந்து விளங்கும் நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அவர்களது ஆதிக்கம் அதிகரித்து வருவதால் சில நாடுகள் இந்தியர்களுக்கு எதிராக திரும்பியுள்ளன.
இங்கிலாந்து விசா விதிகள்
இந்த நிலையில், பிரிட்டன் அரசு, வெளிநாட்டு குடியேற்றங்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய "பாதுகாப்பான ஆங்கில மொழித் தேர்வு" மூலம், விசாவுக்காக விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலத்தில் பேசும், கேட்கும், வாசிக்கும், எழுதும் திறன்கள் 12ஆம் வகுப்பு மாணவரின் அளவுக்கு இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
ஆங்கில தேர்வு UK
இதுதொடர்பாக பேசியுள்ள இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத்,"பிரிட்டனுக்கு வருபவர்கள் எங்கள் மொழியைக் கற்றிருக்க வேண்டும். இல்லையெனில் நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்க முடியாது. இந்த புதிய நடைமுறை, குடியேற்றக் கட்டுப்பாட்டிற்கும் சமூகத்தில் ஒருங்கிணைந்த வாழ்விற்கும் உதவும்" என்று கூறியுள்ளார். ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து இந்தியர்களுக்கு எதிரான விசா விதிமுறைகளை கடுமையாக்கி வரும் நிலையில், இங்கிலாந்து செல்லும் விசாவுக்கான ஆங்கிலத் தேர்வுகளை கடுமையாக்க பிரிட்டன் நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது இந்தியர்களை குறி வைத்து தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications