17 வயது சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை.. 10 நாட்களில் உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் 2ஆவது சம்பவம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊக்கத்தொகைக்காக விண்ணப்பம் நிரப்ப சென்ற 17 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன்னர் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் இது அடுத்த சம்பவமாகும்.
லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் திங்கள்கிழமை அருகில் உள்ள நகரத்திற்கு ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை நிரப்ப சென்றிருந்தார். ஆனால் அவர் மாலை வரை ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து போலீஸாரிடம் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த சிறுமியின் உடல் அவருடைய கிராமத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வறண்ட குட்டையில் சிதைந்த நிலையில் காணப்பட்டது.
இதையடுத்து அந்த சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து கோவிஷீல்ட்.. தமிழகத்தில் பரிசோதிக்க.. முதல்வர் எடப்பாடி அனுமதி!
இதே மாவட்டத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம் இது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி 13 வயது சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமியின் கண்கள் தோண்டப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்ததாக அந்த சிறுமியின் தந்தை புகார் அளித்திருந்தார்.
ஆனால் இந்த புகாரை போலீஸார் மறுத்துள்ளனர். அந்த 13 வயது சிறுமியின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் அவரது கண்களுக்கு அருகே காயம் இருந்தது உண்மைதான். ஆனால் அவரது தந்தை கூறுவது போல் கண்கள் தோண்டப்படவில்லை, நாக்கு அறுக்கப்படவில்லை. அவரது கண்களில் கரும்பு தோட்டத்தில் இருந்த இலைகளால் கீரல் ஏற்பட்டு காயம் ஏற்பட்டதுதான் உண்மை என குறிப்பிடப்பட்டுள்ளது.