லோக்சபா எம்பியுடன் நடந்த இந்திய வீரர் ரிங்கு சிங்கின் நிச்சயதார்த்தம்.. யார் அந்த பிரியா சரோஜ்?
லக்னோ: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக ரிங்கு சிங்கிற்கும், வழக்கறிஞரும், எம்பியுமான பிரியா சரோஜ்-க்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் அந்த பிரியா சரோஜ், இருவருக்கும் இடையில் எப்படி நட்பு உருவாகியது என்பதை பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி ஆச்சரியம் கொடுத்தவர் ரிங்கு சிங். ரிங்கு சிங்கின் அந்த சம்பவம் ஐபிஎல் தொடருக்கே மிகப்பெரிய விளம்பரமாகி போனது. அதன்பின் ரிங்கு சிங்கின் வாழ்க்கை மின்னல் வேகத்தில் மாறியது. அடுத்த சில மாதங்களிலேயே இந்திய அணியில் இடம்பிடித்த ரிங்கு சிங், கன்சிஸ்டன்சியுடன் ரன்களை குவித்தார்.

இதனால் இந்திய டி20 அணியின் நிரந்தர வீரர்களில் ஒருவராக ரிங்கு சிங் மாறினார். தொடர்ந்து கடந்த ஆண்டு கேகேஆர் அணிக்கு சாம்பியன் கோப்பையை வென்று கொடுக்க நிலையில், அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியால் ரூ.13 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். இதனால் அவருக்கு கேகேஆர் அணியின் கேப்டன்சி கொடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் மட்டுமல்லாமல் சொந்த வாழ்விலும் ரிங்கு சிங் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார். குடும்பத்தினருக்காக அலிகாரில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ள அவர், சகோதருக்காக தொழில் ஒன்றை தொடங்கி, இன்னொரு பக்கம் இளம் விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் ரிங்கு சிங்கிற்கு சமாஜ்வாதி எம்பி பிரியா சரோஜ் உடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
26 வயதாகும் பிரியா சரோஜ் உடன் விரைவில் திருமண நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற இளம் எம்பி-க்களில் முக்கியமானவர் பிரியா சரோஜ். அரசியலுக்கு வருவதற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் பிரியா சரோஜ்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மச்சாலி ஷஹார் தொகுதியில் இருந்து 3 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் டூஃபானி சரோஜ். தற்போது எம்எல்ஏ-வாக உள்ள டூஃபானி சரோஜ், நாடாளுமன்றத் தேர்தலில் தனது மகளை களமிறக்கினார். அதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 35,850 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரியா சரோஜ் வெற்றி பெற்றார்.
தற்போது ரிங்கு சிங் - பிரியா சரோஜ் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே நட்பில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. ரிங்கு சிங் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை விளாசிய போது, ஷாரூக் கானை முதல்முறையாக சந்தித்தார். அப்போது ஷாரூக் கான், உங்கள் கல்யாணத்தில் நான் நேரில் வருவதோடு, நிச்சயம் டான்ஸ் ஆடுவேன் என்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications