நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் உ.பிதான் டாப்! முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் தேசிய அளவில் பல மாநிலங்களுக்கு உத்தரப் பிரதேசம் முன் மாதிரியாக இருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட்டிற்கு இதுவரை இல்லாத அளவில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை தொழில் வளர்ச்சி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. மாவட்டம்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரியை உருவாக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், சமூக நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் தேசிய அளவில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் தனது அரசின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "கரும்பு உற்பத்தியிலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் விநியோகத்திலும் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 1.74 கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் இருப்பதை போன்று இந்தியாவில் வேறு எங்கும் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் சாலைகள் கிடையாது. மேலும் சாலையோர வியாபாரிகளுக்கு பராமரிப்பு செலவுகளுக்காக பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாது அடல் பென்ஷன் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனாவின் பலன்களை வழங்குவதில் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 96 லட்சம் சிறுகுறு தொழில்கள் இருக்கின்றன. இந்தியாவில் வேறு எங்கும் இந்த அளவுக்கு கிடையாது. அப்படி இருக்கையில் இத்தொழில்களை மேம்படுத்த அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. மேலும் வேளாண் இடுபொருட்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாணியத்தை நாங்கள் வங்கி கணக்கு மூலம் முறையாக செலுத்தி வருகிறோம்.
சுகாதாரத்தை பொறுத்த அளவில் ஒருபடி முன்னெடுத்து வைத்திருக்கிறோம். அதாவது மாநிலம் முழுவதும் கூடுதல் மருத்துவக்கல்லூரிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரிகளை கொண்டிருக்கும் மாநிலம் எனும் சாதனையை விரைவில் படைப்போம். மறுபுறம் உணவு தானிய உற்பத்தி, ஏழைகளுக்கு கழிப்பறைகளை உருவாக்குதல், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்துதலில் உத்தரப் பிரதேசம் நாட்டிற்கு முன்மாதிரியாக இருக்கிறது.
இப்படியாக ஏழைகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் தேசிய அளவில் பல மாநிலங்களுக்கு உத்தரப் பிரதேசம் முன்மாதிரிய இருக்கிறது" எனற யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications