ராமர் காட்டுக்கு சென்ற பாதை... உபியில் 4 தேசிய நெடுஞ்சாலைகள் குறுக்கே கட்ட... மத்திய அரசு முடிவு
லக்னோ: ராமர் அயோத்தியிலிருந்து காட்டுக்குச் சென்றதாகக் கருதப்படும் பாதையைக் கட்டமைக்கச் சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்குப் பிரதமர் மோடி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். இன்னும் சில ஆண்டுகளில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் என்று இதற்குத் தேவையான நிதி மக்களிடம் இருந்து திரட்டப்பட்டு வருவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமாயணத்தின் படி ராமர் தன் தந்தையின் கட்டளைப்படி, மனைவி சீதை மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் 14 ஆண்டுகள் காட்டில் இருந்தார். இதற்காக அயோத்தியிலிருந்து, தனது மனைவி மற்றும் சகோதரருடன் அவர் சித்ரகூட் என்ற இடத்துக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், அயோத்தியிலிருந்து சித்ரகூட்டிற்கு ராமர் சென்றதாக நம்பப்படும் 210 கிலோமீட்டர் பாதையைக் கட்டமைக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு 'ராம் வன் காமன் மார்க்' என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பாதை பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ராஜாபூர் வழியாகக் கட்டமைக்கப்பட உள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பாதை தேசிய நெடுஞ்சாலைகள் NH-28, NH-96, NH-731A ஆகியவற்றுக்குக் குறுக்கே செல்கிறது. மேலும், ஸ்ரீன்வர்பூரில் கங்கா நதியின் மேலும் செல்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது மாநிலத்தில் ராமர் பாதையை கட்டமைக்க மத்திய சாலை துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல சத்தீஸ்கர் முதல்வரும் தனது மாநிலத்தில் ராமர் காட்டுக்குச் சென்ற பாதை உருவாக்கப்பட்டு, அவை சுற்றுலா தளங்களாக மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.