உ.பியில் பாஜக, காங்கிரசை வீழ்த்த உருவானது கூட்டணி.. நாளை அறிவிக்கும் மாயாவதி, அகிலேஷ்
லக்னோ:லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி அறிவிப்பை உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் நாளை கூட்டாக அறிவிக்கின்றனர்.
வரவிருக்கும் லோக்சபா தேர்தலின் போது அகிலேஷின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தேர்தலுக்கு பின்னர் காங்கிரசை ஆதரித்தன.

ஆனால் இரு கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் பொறுப்பு ஏதும் வழங்கப்படாததால் அக்கட்சியின் தலைமை கடும் அதிருப்தியில் இருந்தது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் அரசுகளுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக மிரட்டல் விடுத்தார். டுவிட்டரில் அகிலேஷ் யாதவ்வும் தனது அதிருப்தியை வெளிப்படையாகவே கூறினார்.
அதேநேரம் நாட்டை ஆளும் கூட்டணியை தீர்மானிக்கும் முக்கிய தேர்தல் களமாக உத்தரப்பிரதேசத்தின் லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு இருக்கும் 80 தொகுதிகளில் பெரும்பான்மை பெறும் கட்சிக்கு மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக அமையும்.
இந்த நிலையில், இங்கு எதிரிக் கட்சிகளாக இருக்கும் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜூம் கூட்டணி அமைக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு மிக்க கட்சிகளாக விளங்கும் சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இரு கட்சி தலைவர்களும் கடந்த வாரம் டெல்லியில் சந்திப்பு நடத்தினர்.
அப்போதே கூட்டணி ஏற்பட்டுவிட்டதாகவும், தொகுதிகள் உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நாளை இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
அப்போது லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளும் உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி வைத்தால், அது காங்கிரசுக்கு பேரிழப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications