பான்மசாலா போட்டு சட்டசபையில் துப்பிய உ.பி எம்எல்ஏ! சுத்தம் செய்த சபாநாயகர் வேதனையுடன் சொன்ன வார்த்தை
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபையில் எம்.எல்.ஏ ஒருவர், பான் மசாலா போட்டுவிட்டு துப்பியுள்ளார். இதை அறிந்த சபாநாயகர் அதை சுத்தம் செய்ததோடு, பான்மசாலா போட்டு துப்பிய எம்.எல்.ஏ யார் என்பதை பகிரங்கமாக சொல்ல விரும்பவில்லை எனவும் தனிப்பட்ட முறையில் அவர் என்னை வந்து சந்திக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். மேலும், நமது இடத்தை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்புதான் என வேதனையுடன் கூறியிருக்கிறார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். அம்மாநிலத்தில் தொடர்ந்து 2 வது முறையாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. தற்போது, அங்கு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சி பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகிறது.

யாரையும் அவமானப்படுத்த விரும்பவில்லை
இதனால் அனல் பறக்க விவாதங்கள் சட்டசபையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சட்டசபை வளாகத்தில் மெயின் நுழைவு பகுதியில் பான் மசாலா போட்டு ஒரு எம்.எல்.ஏ துப்பியிருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதைக் கவனித்த சபநாயகர் சதீஷ் மஹனா, வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் கூறியதாவது:-
சட்டசபை ஹாலில் எம்.எல்.ஏ ஒருவர் பான் மசாலா போட்டுவிட்டு துப்பியது எனது கவனத்திற்கு வந்தது. இதையடுத்து அங்கு சென்று நானே சுத்தம் செய்தேன். அந்த எம்.எல்.ஏ யார் என்பதை வீடியோவில் பார்த்துவிட்டேன். ஆனால் யாரையும் அவமானப்படுத்த நான் நினைக்கவில்லை. எனவே அந்த எம்.எல்.ஏ யார் என நான் சொல்ல மாட்டேன். நான் அவையில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சொல்வது என்னவென்றால், யாராவது இப்படி செய்தால் உடனே அவர்களை தடுத்து நிறுத்துங்கள்.
இல்லையெனில் சம்மன் விடுப்பேன்
இந்த அவையை தூய்மையாக வைத்து இருக்க வேண்டியது நமது கடமை. இந்த விவகாரத்தில் தொடர்புடைய எம்.எல்.ஏ தானாக முன்வந்து ஒப்புக்கொண்டால் நல்லது. இல்லையென்றால் நான் அவர்களுக்கு சம்மன் விடுப்பேன்" என்றார். சட்டசபை கார்பெட்டில் பான்மசாலா போட்டு துப்பியிருக்கும் பதிவுகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் சபாநாயகர், இந்த கார்பெட்டை மாற்றுவதற்கான செலவை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏவிடம் இருந்து பிடிக்க வேண்டும் என பேசுவதும் அடங்கியுள்ளது. சட்டசபைக்குள் பான்மசாலா போட்டு எம்.எல்.ஏ துப்பியது தொடர்பாக நெட்டிசன்களும் காரசாரமாக பதிவிட்டு வருகிறார்கள்.
சட்டசபைக்குள்ளேயே இப்படியா என விமர்சனம்
சில நெட்டிசன்கள் கூறுகையில், "பொதுவாகவே வடமாநிலத்தவர்கள் என்றால் ரயில் நிலையம் என எந்த பொது இடமும் பாராமல் பான்மசாலா போட்டு கறைபடுத்தி விடுகிறார்கள் என்ற விமர்சனம் உள்ளது. தற்போது சட்டசபைக்குள்ளே இப்படி நடந்து இருப்பது இந்த விமர்சனத்திற்கு வலு சேர்ப்பதகாக உள்ளது. எனவே இனியாவது பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications